வசீகரத் தோற்றம் வேண்டுமா? காய்கறி, பழம் சாப்பிடுங்க: ஆய்வில் தகவல்

By Mayura Akilan

Vegetables
காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது சருமப் பொலிவிற்கும், முக வசீகரத்திற்கும் ஏற்றது என்று சமீபத்திய ஆய்வில் தெரிவந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்பவர்கள் பொன்னிற மேனியை பெறுவார்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவுப்பழக்கத்திற்கும், மேனி எழிலுக்கும் உள்ள தொடர்ப்பு குறித்து இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது,

அன்றாட உணவில் கேரட், தக்காளி போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்வது கரோட்டினாய்டு லெவலை அதிகரித்து மேனியை பொலிவுறச் செய்வதாகவும் ஆய்வை மேற்கொண்ட டாக்டர் இயான் ஸ்டீபன் கூறியுள்ளார்.

வசீகரத் தோற்றம்

இரண்டு மாதங்களுக்கு பழங்கள், காய்கறிகளை உட்கொண்டால் அதில் உள்ள கரோட்டினாய்டுகளும், ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ்சும், உடலில் உள்ள இறந்த செல்களை அழித்து மேனியை பொன்னிறமாக்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மனிதர்களின் தோல் நிறம் உயிரியல் தொடர்பானது. இது பளபளப்பாக இருப்பது ஆரோக்கியத்தின் அறிகுறி என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே அநேகம் பேர் ஆரோக்கியமான பொன்னிற மேனியை அதிக அளவில் விரும்புகின்றனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே வசீகர தோற்றம் வேண்டுபவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு காய்கறிகள், பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்களேன்.

Story first published: Tuesday, January 24, 2012, 13:28 [IST]
Desktop Bottom Promotion