வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப தக்காளியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க...

Skin Care Tips In Tamil: ஒவ்வொருவருக்குமே வெள்ளையாக ஜொலிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பலர் கடைகளில் விற்கப்படும் பல்வேறு அழகு பராமரிப்பு பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பை கொடுத்து வருவார்கள்.

குறிப்பாக கோடைக்காலம் வந்துவிட்டாலே நிறைய பேரது சரும நிறமே மாறியிருக்கும். சொல்லப்போனால் பலர் அடையாளமே தெரியாத அளவில் நிறம் மாறி கருப்பாக காட்சியளிப்பார்கள். நீங்களும் இப்படி கருப்பாக நிறம் மாறி காணப்படுகிறீர்களா? உங்கள் சரும நிறத்தை அதிகரிக்க நினைக்கிறீர்களா?

Skin Care Tips: How To Use Tomato On Face For Fairness In Tamil

அப்படியானால் அதற்கு சமையலறையில் உள்ள தக்காளி ஒன்றே நல்ல பலனைத் தரும். ஏனெனில் தக்காளியில் வைட்டமின் ஏ, சி, பி, கே போன்றவை அதிகம் உள்ளன. இவை சருமத்தில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும், முகப்பருவை தடுக்கும், கொலாஜன் உற்பத்தியை தூண்டும்.

முக்கியமாக தக்காளியில் உள்ள வைட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது சரும நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. கூடுதலாக தக்காளியில் லைகோபைன் உள்ளது. இது வெயிலுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.

இவ்வளவு நன்மைகளை அளிக்கும் தக்காளியைக் கொண்டு சரியான வழியில் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும். இப்போது சரும நிறத்தை அதிகரிக்கவும், சரும பிரச்சனைகளைப் போக்கவும் தக்காளியை எப்படி பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.

வழி #1

ஒரு சிறிய தக்காளியை எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் முகத்தை நீரால் கழுவி விட்டு, பின்பு தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரத்துணியால் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கி, முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

வழி #2

உங்கள் முகத்தில் உள்ள சருமத்துளைகள் விரிவடைந்து, முகச்சருமம் மேடு பள்ளமாக காணப்படுகிறதா? இப்படி விரிவடைந்த சருமத் துளைகளை சுருக்க வேண்டுமா? அப்படியானால் ஒரு பௌலில் தக்காளி சாற்றினை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

வழி #3

உங்கள் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா? பொலிவான சருமத்தைப் பெற, ஒரு பௌலில் தக்காளி சாறு மற்றும் தேனை சரிசம அளவில் எடுத்து கலந்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.

வழி #4

வெளியே வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், சருமத்தில் அரிப்பும், எரிச்சலும் ஏற்படுகிறதா? அப்படியானால் ஒரு பௌலில் தக்காளி கூழை சிறிது எடுத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

வழி #5

வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்க, தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் இவ்விரண்டிலும் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சரும நிறத்தை மேம்படுத்தும்.

வழி #6

சருமத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தாலும், முகம் பொலிவிழந்து கருமையாக காட்சியளிக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க, பாதி தக்காளியை எடுத்து, அதை சர்க்கரையில் தொட்டு, ஈரப்பதமான முகத்தில் சிறிது நேரம் மென்மையாக தேய்க்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பிரகாசமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

Story first published: Thursday, June 22, 2023, 16:05 [IST]
Desktop Bottom Promotion