கூந்தல் உதிராமல் இருக்க நிறைய தண்ணீர் குடிங்க!

By Mayura Akilan

Ways To Prevent Hair Loss
கூந்தல் உதிர்வது என்பது இன்றைக்கு பெரும்பாலோனோரின் பிரச்சினையாக உள்ளது. இதற்குக் காரணம் மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் ரசாயன பொருட்கள் நிறைந்த ஷாம்பு, சோப்புகளை உபயோகிப்பதும்தான் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். நம் உடலுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் குடித்தாலே போதும் கூந்தல் உதிர்வை தடுக்கலாம் என்றும் அழகு சிகிச்சை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பொடுகு தொல்லை

கூந்தல் உதிர்வதற்காக சரியான காரணத்தை கண்டுபிடித்தாலே போதும் உதிர்வதை தடுத்து விடலாம். ஆனால் பெரும்பாலோனோர் கண்ட கண்ட "ஷாம்பூக்கள்,' "கண்டிஷனர்கள்' உபயோகித்து, பிரச்னையைப் பெரிதாக்கிக் கொள்கின்றனர்.

பொடுகு காரணமாகத்தான் நிறையப் பேருக்கு கூந்தல் உதிரத் தொடங்கி, மெலிந்து, முனை பிளவுபட்டு, முகத்தின் பொலிவையே கெடுப்பது வரை போகிறது. பொடுகு பிரச்னை, முடி உதிர்வு, புழுவெட்டு என முடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும், அதற்கென இருக்கும், நிபுணர்களிடம் செல்ல வேண்டும்.

தலைக்கு எண்ணெய்

எக்காரணம் கொண்டும், கூந்தலை எண்ணெய் தடவாமல், சீப்பு வைத்து வார கூடாது. இப்படிச் செய்வது, நாமே கூந்தலைப் பிடுங்கி எறிவதற்குச் சமம். முடிக்கு எண்ணெய் தடவும் வழக்கமே நிறையப் பேரிடம் குறைந்து விட்டது. எண்ணெய் தடவப் பிடிக்கவில்லை என நினைப்பவர்கள், "ஹேர் வைட்டலைசர்' உபயோகிக்கலாம். இதைப் பயன்படுத்தினால், எண்ணெய் தடவியது போன்று முடி பளபளப்பாக இருக்கும்.

மூன்று நாளுக்கு ஒருமுறை தலைக்குக் குளிப்பது அவசியம். வாரம் ஒருமுறை அல்லது 15 நாளுக்கு ஒருமுறை எண்ணெய்க் குளியலும் செய்ய வேண்டும். தலைக்குக் குளித்து, முடித்து, கூந்தலைத் துவட்ட கடினமான துணியைப் பயன்படுத்தக் கூடாது. மென்மையான துணியைத் தான் பயன்படுத்த வேண்டும். முடியைக் கசக்கி, முறுக்கி, துவட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் குடிங்க

தினமும் நம் உடலுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் குடிப்பது, மிகவும் அவசியம். இது உடலில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்ற உதவும். தண்ணீரானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு கல்லீரல் சருமம் ஆகியவற்றை பாதுகாக்கிறது. அதோடு கூந்தல் உதிரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது என்றும் அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Monday, June 4, 2012, 15:10 [IST]
Desktop Bottom Promotion