அழகோடு ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா?

By Mayura Akilan

Hair
ஆணோ, பெண்ணோ அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்பதுதான் அனைவரின் கனவு. ஆனால் கூந்தல் உதிர்வது என்பது இயற்கையானது. புதிய கூந்தல் முளைப்பதற்காக பழைய கூந்தல் உதிரும். அளவிற்கு அதிகமாக உதிரும் போதுதான் எச்சரிக்கை அடையவேண்டும்.

ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம். மன உளைச்சல், கோபம், படபடப்பு போன்றவைகளினால் கூந்தல் உதிர்கிறது.

அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று, குளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசு. கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள். கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது போன்றவைகளினாலும் கூந்தல் உதிர்கிறது.

ஆரோக்கியமான, நீளமான, அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்பவர்கள் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். வைட்டமின், தாதுச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் தலைமுடி உதிர்வது குறையும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

ஊட்டச்சத்துக்கள்

தலைமுடி ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்ளக்ஸ் உணவுகள் குறிப்பாக பி6 அவசியம். அதேபோல் வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் போன்றவை உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். மெக்னீசியம், சல்பர், துத்தநாகம் போன்றவையும் அவசியம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

செம்பருத்தி இலைகள்

வெண்ணெயை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து சிகைக்காய் போட்டு குளிக்க அடர்த்தியான முடி வளரும்.

சிகப்பு செம்பருத்தி செடி இலை எடுத்து அரைத்து, அதை தலையில் தேய்த்து குளிக்கவும்.நல்ல,குளிர்ச்சியாக இருக்கும், உடல் சுடு தனியும்,அடர்த்தியா கருப்பாக முடி வளரும்.வாரம் இருமுறை குளிக்கலாம்.

செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிது கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு குளித்தால், தலை "ஜில்' லென்றிருக்கும். தலை முடி "புசுபுசு'வென ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு குளிக்கலாம் தலைமுடி அடர்த்தியாகும்.

Story first published: Wednesday, April 18, 2012, 16:43 [IST]
Desktop Bottom Promotion