கோதுமை ரவா பொங்கலும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Wheat Rava Pongal With Coconut Chutney Recipe In Tamil: காலை வேளையில் எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பொங்கல் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் சற்று வித்தியாசமாக கோதுமை ரவையைக் கொண்டு பொங்கல் செய்யுங்கள்.

இந்த பொங்கல் சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த பொங்கலுக்கு தேங்காய் அதிகம் சேர்க்காத தேங்காய் சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும்.

Wheat Rava Pongal How To Make Wheat Rava Pongal With Coconut Chutney

உங்களுக்கு கோதுமை ரவா பொங்கல் மற்றும் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா பொங்கல் மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பொங்கலுக்கு...

* பாசிப்பருப்பு - 1/4 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கோதுமை ரவை - 3/4 கப்
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

பொங்கல் தாளிப்பதற்கு...

* நெய் - 5 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* முந்திரி - 10

சட்னிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 4 சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* வெங்காயம் - 2
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை நீரில் ஒருமுறை கழுவி, நீரை முழுமையாக வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையை சேர்த்து, அத்துடன் கழுவி வைத்துள்ள பாசிப்பருப்பையும் சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் 3 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொங்கல் தாளிப்பதற்கு நெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்த்து, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு 3 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை ரவா பொங்கல் தயார்.
* அடுத்து சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்து, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தேங்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, April 8, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion