கொள்ளு சட்னி

By Maha

காலையில் இட்லி, தோசை போன்றவை சமைக்கும் போது, அதற்கு எப்போதும் சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னியைத் தான் பலரும் செய்வார்கள். ஆனால் சற்று வித்தியாசமாக வீட்டில் கொள்ளு பருப்பு இருந்தால், அதனைக் கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். இந்த சட்னியானது சுவையாக இருப்பதுடன், ஆரோக்கியமானதும் கூட.

மேலும் மதிய வேளையில் இட்லி எடுத்து சென்றால், அதற்கு அருமையாகவும் இருக்கும். சரி, இப்போது கொள்ளு சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Horsegram Chutney

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின்னர் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து 3 நிமிடம் வறுத்து, பின் அதில் வறுத்த கொள்ளு சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை ஒரு பௌலில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீதமுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், கொள்ளு சட்னி ரெடி!!!

Image Courtesy: sharmispassions

Story first published: Wednesday, August 20, 2014, 6:01 [IST]
Desktop Bottom Promotion