சுவையான பாவ் பாஜி!!!

By Maha

Pav Bhaji
பாவ் பாஜி வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இது உடலுக்கு மிகவும் சிறந்தது, ஏனெனில் இதற்கு செய்யப்படும் மசாலாவில் நமக்கு வேண்டிய எந்த காய்கறிகளையும் வைத்து செய்யலாம். மேலும் காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்து, அவர்களை சாப்பிட வைக்கலாம். அந்த பாவ் பாஜியை எப்படி செய்வதென்று பார்க்கலாமா!!!

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 3
கேரட் - ஒரு கப்
பீன்ஸ் - ஒரு கப்
பச்சைபட்டாணி - 1/2 கப்
காலிஃப்ளவர் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
இஞ்சிபூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன்
மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்
தனியாத்தூள் - ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
கரம்மசாலா தூள் - ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்
சோம்பு - சிறிது
கொத்தமல்லி - சிறிது
வெண்ணெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
பன் - ஐந்து

செய்முறை :

பாவ் பாஜி மசாலா செய்வதற்கு, முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கேரட் தோலை சீவி சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவர், பீன்ஸையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் நீரை விட்டு, அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றைப் போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் வெந்நதும் நீரை வடித்து, மசித்துக் கொள்ளவும்.

பிறகு வெங்காயம், தக்காளியை சிறிது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின் ஒரு அகன்ற வாணலியில் வெண்ணெய் மற்றும் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும், அதில் சோம்பைப் போடவும். சோம்பு பொரிந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.

பிறகு இஞ்சிபூண்டு விழுதைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். அவை நன்கு வதங்கியதும் அத்துடன் நறுக்கிய காலிஃப்ளவரைப் போட்டு நன்கு வதக்கவும்.

காலிஃப்ளவர் நன்கு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம்மசாலா தூள் போட்டு உப்பு சிறிது சேர்த்து வதக்கவும்.

பின் மசித்த அந்த காய்களைப் அத்துடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை விட்டு கலக்கவும். தண்ணீரை அதிகமாக விடக் கூடாது, மசாலாவிற்குத் தேவையான அளவே ஊற்ற வேண்டும்.

சிறிது நேரம் கழித்து மசாலாவில் தண்ணீர் வற்றி கெட்டியாக ஆனதும், அதில் எலுமிச்சை சாற்றை விட்டு கிளறி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும்.

பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் பன்னின் நடுபகுதியை இரண்டாக நறுக்கி, அதன் மேல் வெண்ணெய்யைத் தடவி சூடாக்கிக் கொள்ளவும்.

இறுதியாக தயாரித்து வைத்திருந்த மசாலாவை பன்னின் நடுவே வைத்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

Story first published: Friday, June 8, 2012, 12:48 [IST]
Desktop Bottom Promotion