நவராத்திரி ஸ்பெஷல்: கடலைப்பருப்பு சுண்டல்

By Maha

நவராத்திரிக்கு மாலையில் பூஜை செய்யும் போது, சுண்டல் ரெசிபிக்களை படைப்பது வழக்கம். இத்தகைய சுண்டல் ரெசிபியில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சுண்டல் ரெசிபிக்களை செய்வார்கள். அந்த வகையில் இன்று கடலைப்பருப்பு சுண்டல் செய்யலாம்.

இப்போது இங்கு அந்த கடலைப்பருப்பு சுண்டல் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை செய்து மகிழுங்கள்.

Bengal Gram Sundal For Navratri

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - சில துளிகள்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

கடுகு - 3/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவி குக்கரில் போட்டு, போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 1-2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசில் போனதும் அதனை இறக்கி, நீரை வடித்துவிட்டு, பருப்பை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து, நன்கு கிளறி, துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறிவிட்டால், சுவையான கடலைப்பருப்பு சுண்டல் ரெடி!!!

Story first published: Monday, October 7, 2013, 18:35 [IST]
Desktop Bottom Promotion