பீட்ரூட் மற்றும் பன்னீர் புலாவ்

By Maha

காலையில் எப்போதுமே வெரைட்டி ரைஸ் தான் செய்வதற்கு சிறந்ததாக இருக்கும். அதிலும் எப்போதும் ஒரே மாதிரியான வெரைட்டி ரைஸ் செய்யாமல், சற்று வித்தியாசமாக பீட்ரூட் மற்றும் பன்னீர் புலாவ் ரெசிபியை ஒரு முறை முயற்சிக்கலாம். இந்த ரெசிபி அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவாக இருக்கும். அதிலும் இந்த மாதம் பீட்ரூட் அதிகம் கிடைக்கும் என்பதால், இந்த பீட்ரூட்டை உணவில் அதிகம் சேர்த்தால், உடலில் இரத்தம் நன்கு ஊறும்.

சரி, இப்போது அந்த பீட்ரூம் மற்றும் பன்னீர் புலாவ் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

Beetroot n Paneer Pulao

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப் (ஊற வைத்தது)
பீட்ரூட் - 1 (துருவியது)
பன்னீர் - 100 கிராம் (துருவியது)
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
புதினா - 1/2 கப் (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு மற்றும் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்பு பீட்ரூட், பன்னீர் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி, கரம் மசாலா, புதினா மற்றும் உப்பு சேர்த்து பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.

பிறகு அரிசியைக் கழுவிப் போட்டு கிளறி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதிக்கும் போது, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பீட்ரூட் மற்றும் பன்னீர் புலாவ் ரெடி!!!

Story first published: Friday, October 4, 2013, 6:06 [IST]
Desktop Bottom Promotion