காய்கறி இல்லாத நேரத்துல 10 நிமிடத்தில் இந்த மிளகாய் கிள்ளி சாம்பாரை செய்யுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது..

Posted By:

Milagai Killi Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? கவலை வேண்டாம். துவரம் பருப்பு இருந்தால் போதும், அட்டகாசமான சுவையில் மிளகாய் கிள்ளி சாம்பாரை செய்யலாம்.

இப்படி செய்யும் சாம்பார் சாதத்துக்கு மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இதை சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டால், சைடு டிஷ் வேறு எதுவுமே தேவைப்படாது. வெறும் அப்பளமும், ஊறுகாயும் இருந்தாலே போதும். இந்த சாம்பார் 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும்.

Toor Dal Sambar How To Make a Milagai Killi Sambar Recipe

உங்களுக்கு மிளகாய் கிள்ளி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகாய் கிள்ளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 3/4 கப்
* தண்ணீர் - 3 கப்
* பூண்டு - 4 பல்
* பச்சை மிளகாய் - 4
* பெரிய தக்காளி - 1
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* விதைகளை நீக்கிய வரமிளகாய் - 6
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (1 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் குக்கரில் துவரம் பருப்பை எடுத்து நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய துவரம் பருப்புடன் 3 கப் நீரை ஊற்றி, அத்துடன் பூண்டு, பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு கரண்டியால் மசித்து விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை மற்றும் விதைகளை நீக்கி கிள்ளிய வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் மசித்து வைத்துள்ள பருப்பை அப்படியே ஊற்றி கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, சாம்பார் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் ஊற வைத்த புளிச்சாற்றினை ஊற்றி, நன்கு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மிளகாய் கிள்ளி சாம்பார் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 18, 2025, 13:51 [IST]
Desktop Bottom Promotion