டிபன் கடை ஸ்டைல் தக்காளி கார சட்னி.. ஒருடைம் வீட்டுல செய்யுங்க.. அடிக்கடி செய்ய சொல்லி கேப்பாங்க..

Posted By:

Thakkali Kara Chutney Recipe In Tamil: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் டிபனா? அதற்கு தினமும் சைடு டிஷ் முடிவு செய்வதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? உங்களின் வசதிக்காகவே, தமிழ் போல்ட்ஸ்கை ஒருசில சுவையான சட்னி ரெசிபிக்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று பார்க்கப் போவது தக்காளி சட்னியைப் பற்றி தான்.

தக்காளி சட்னியை பல ஸ்டைலில் செய்யலாம். எப்படி செய்தாலும் தக்காளி சட்னி அட்டகாசமாக இருக்கும். இப்போது அதில் ஒரு ஸ்டைலான டிபன் கடை ஸ்டைலில் எப்படி செய்வதென்று தான் பார்க்கப் போகிறோம். இந்த டிபன் கடை தக்காளி சட்னி செய்வது மிகவும் சுலபம். வேலைக்கு செல்பவர்கள் இந்த மாதிரியான சட்னியை தெரிந்து வைத்துக் கொண்டால், காலையில் டக்கென்று செய்து விடலாம்.

Thakkali Kara Chutney How To Make a Tiffen Kadai Style Tomato Kara Chutney Recipe

இந்த சட்னிக்கு சரியான பக்குவதத்தில் பொருட்களை வதக்கி அரைக்க வேண்டும். ஒருமுறை இந்த தக்காளி கார சட்னியை வீட்டில் செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். அந்த அளவில் இதன் சுவை இருக்கும்.

உங்களுக்கு டிபன் கடை ஸ்டைல் தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5 (காரத்திற்கு ஏற்ப)
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 5
* தக்காளி - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* புளி - சிறிய துண்டு

தாளிப்பதற்கு....

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே எண்ணெயில் 5 வரமிளகாயை சேர்த்து ப்ரை செய்து, அதையும் உளுத்தம் பருப்புடன் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் பூண்டு, இஞ்சியை சேர்த்து வதக்கி, பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி, சிறிய துண்டு புளியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். புளியை அளவாக சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், சட்னி மிகவும் புளிப்பாகிவிடும். அனைத்து பொருட்களும் நன்கு வதங்கியதும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாயை சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வதக்கிய தக்காளி மற்றும் பிற பொருட்களை சேர்த்து, நீர் ஊற்றாமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, April 3, 2025, 7:10 [IST]
Desktop Bottom Promotion