நினைத்தாலே இனிக்கும்..மனகோலம்

By Mayura Akilan

Manakolam
மனகோலம் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான இனிப்பு சிற்றுண்டியாகும். இது சத்தானது. பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்பு ஆகியவையோடு வெல்லம், பொட்டுக்கடலை நாட்டுச் சர்க்கரை சேர்ப்பதால் இது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க இனிப்பாகும். இது செட்டிநாடு பகுதியில் பிரசித்தி பெற்றது.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 100 கிராம்
பாசிப் பருப்பு – 1/2 கிலோ
கடலைப் பருப்பு – 1/4 கிலோ
உளுந்தம் பருப்பு – 1/4 கிலோ
பொட்டுக் கடலை – 1/4 கிலோ
தேங்காய் – 1
வெல்லம் – 3/4 கிலோ
சர்க்கரை – 1/4 கிலோ
எண்ணெய் – 1/2 கிலோ ( பொரிக்க )
நெய் – 3 டீ ஸ்பூன்

மனகோலம் செய்முறை

பச்சரிசி, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு , உளுந்தம் பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து, அரைத்து, சலித்துக் கொள்ளவும்.

மாவு அனைத்தையும் அகலமான பாத்திரத்தில் ஒன்றாக கொட்டி சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்துக் காய வைக்கவும். முறுக்கு பிழியும் அச்சில் மாவை வைத்து, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பிழிய வேண்டும். வெந்த உடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்

அகலமான பாத்திரத்தில் மனகோலத்தை உதிர்த்து விட்டு தேங்காயை நறுக்கி, நெய் விட்டு வதக்கி போடவும். அதன் மீது பொட்டுக் கடலையையும் இளஞ் சூடாக வறுத்து போடவும். பின்னர் ஏலக்காய் – சர்க்கரை ஆகியவற்றைத் தூளாக்கிக் மனகோலத்தின் மீது தூவி விடவும்.
வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீரை தெளித்துக் கொதிக்க வைத்துக் கம்பிப் பாகு போல காய்ச்ச வேண்டும். பாகு சூடாக இருக்கும் போதே மனகோலத்தின் மீது ஊற்றிக் கொண்டே, கரண்டியினால் கிளற வேண்டும்.

பாகை ஊற்றுவதும், கரண்டியினால் கிளறுவதுமாக இருங்கள். அப்போதுதான் கெட்டியாகாது. இந்த கலவை நன்றாக ஆறிய பின்னர் காற்றுப் புகாத பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சுவையான, சத்தான மனகோலம் தயார். ஒருமாதம் வரை கெட்டுப்போகாது.

Story first published: Thursday, March 1, 2012, 13:37 [IST]
Desktop Bottom Promotion