சர்க்கரைவள்ளிக் கிழங்கை வைச்சு இந்த செட்டிநாடு அடை தோசை செஞ்சு பாருங்க... டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்...!

Posted By:

Sweet Potato Adai Dosai Recipe in Tamil: தமிழ்நாடு சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்றது. மதுரை, காரைக்குடி போன்ற இடங்கள் உணவுக்கு பிரசித்தி பெற்றவையாக இருந்தாலும், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பிரசித்தி பெற்ற சில உணவுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் காரைக்குடியின் பல புகழ்பெற்ற உணவுகளில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு அடை அல்லது இனிப்பு அடை மிகவும் பிரபலமானதாகும்.

தினமும் இட்லி, தோசை போன்ற உணவுகளையே சாப்பிட்டு சலித்துப் போனவர்களுக்கு இந்த இனிப்பு அடை வித்தியாசமானதாக சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். இந்த அடையை காலை அல்லது இரவு உணவாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். இதில் கூடுதல் சிறப்பு இதற்கு சைடிஷ் எதுவுமே தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.

Sweet Potato Adai Dosai Recipe How to Make Sweet Potato Adai Dosai Recipe

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை தோசை ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ¼ கிலோ
- புழுங்கல் அரிசி - 1 கப்
- ரவை - ½ கப்
- மைதா மாவு - ½ கப்
- வெல்லம் - ¼ கிலோ
- ஏலக்காய் - 3 (பொடியாக்கியது)
- நெய் - 4 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் - 1 மூடி

செய்முறை :

- அரிசியை இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரில் அலசி பின் 5 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். அரிசி நன்றாக ஊறியதும் அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- சர்க்கரைவள்ளிக் கிழங்கை மண் இல்லாமல் கழுவி தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி அரிசியுடன் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
- அதில் ரவை மற்றும் மைதா மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- தேங்காயை துருவி வைத்து கொள்ளவும். ஏலக்காயை பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும். வெல்லத்தை சிறிய துண்டுகளாக உடைத்து வைத்து கொள்ளவும்.
- துண்டுகளாக உடைத்த வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்றி கரைய விடவும்.
- வெல்லம் கரைந்ததும் அதை வடித்து மண் மற்றும் தூசி இல்லாமல் எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சி கொள்ளவும்.
- பின் அதில் பொடி செய்த ஏலக்காய் மற்றும் துருவிய தேங்காயை சேர்க்கவும்.
- அரைத்து வைத்த மாவுடன் வெல்லக் கரைசலை சேர்த்து அடை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அரைத்து வைத்த மாவை எடுத்து தோசை கல்லில் சிறிய அடையாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு மிதமான தீயில் இரண்டு புறமும் நன்கு வேக வைத்து எடுத்தால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை ரெடி.

[ of 5 - Users]
Story first published: Monday, September 29, 2025, 18:01 [IST]
Desktop Bottom Promotion