சேலம் தக்காளி குருமா ரெசிபி... இந்த மாதிரி வைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்...!

Posted By:

Salem Thakkali Kurma Recipe in Tamil: இரவு வேளையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி தான் டின்னராக இருக்குமா? அந்த டிபனுக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து அலுத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் அசைவ குருமாவை மறக்கடிக்கும் வகையில் ஒரு சூப்பரான சைவ குருமாவை செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் தக்காளியும், கொஞ்சம் பொட்டுக்கடலையும் இருந்தால், அட்டகாசமான சுவையில் சேலம் ஸ்டைல் தக்காளி குருமா செய்யலாம். இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த சேலம் ஸ்டைல் தக்காளி குருமா சுவையானது மட்டுமல்ல சில நிமிடங்களில் செய்துவிடக் கூடியதாகும்.

Salem Thakkali Kurma Recipe How to Make Salem Thakkali Kurma

உங்களுக்கு சூப்பரான சேலம் ஸ்டைல் தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேலம் தக்காளி குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- தக்காளி - 4
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- பூண்டு பல் - 5
- இஞ்சி - 1/2 அங்குலம்
- பச்சை மிளகாய் - 2
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- கசகசா - 1 ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1 துண்டு
- கிராம்பு - 2
- துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
- பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- மல்லித்தூள் - ஒன்றரை ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு

தாளிக்க:

- எண்ணெய் - 1 ஸ்பூன்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- கறிவேப்பிலை - சிறிது
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
- கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

செய்முறை:

- தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்றாக கழுவி நறுக்கி தனியாக வைக்கவும்.

- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய தக்காளி, பூண்டு இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

- தக்காளி நன்கு வதங்கியதும் மீதமுள்ள மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

- இது ஆறியதும், ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து மசாலாவை நைஸாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து, சோம்பு, பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.

- வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து, கெட்டியாகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும். 1 முதல்ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

- உப்பு சரிபார்த்து, நல்ல வாசனை வரும் வரை குருமாவைக் கொதிக்க விடவும். இறுதியாக அடுப்பை அணைத்து, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

- அவ்வளவுதான் சுவையான சேலம் தக்காளி குருமா ரெடி. இது இட்லி, தோசை, இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Friday, January 2, 2026, 22:27 [IST]
Desktop Bottom Promotion