மணமணக்கும்.. ருசியான... சைவ மீன் குழம்பு

Posted By:

Saiva Meen Kuzhambu: ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் சமைக்கும் போது என்ன சமைப்பது என்று பலரும் பல மணிநேரம் யோசிப்பதுண்டு. தினமும் ஒரே மாதிரி சமைத்து சாப்பிட்டால், அது அலுத்து போய்விடும். எனவே அவ்வப்போது சற்று வித்தியாசமான சமையலை செய்து கொடுக்க நினைப்பார்கள்.

நீங்களும் அப்படி உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்க நினைத்தால், சைவ மீன் குழம்பை ஒரு நாள் செய்து கொடுங்கள். சைவ மீன் குழம்பானது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.

Saiva Meen Kuzhambu Recipe

உங்களுக்கு சைவ மீன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைவ மீன் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சைவ மீன் செய்வதற்கு...

* தட்டைப்பயறு - 1/4 கப்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* எண்ணெய் - 1/4 கப் (பொரிப்பதற்கு)

குழம்பிற்கு...

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

* முதலில் தட்டைப்பயறை நீரில் ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, பின் அந்த தட்டைப்பயறை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சோம்பு, மிளகாய் தூள், உப்பு மற்றும் பூண்டு சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாழை இலையை எடுத்து, அதில் அரைத்த பேஸ்ட்டை ஒரு செவ்வக வடிவில் தட்டி வாழை இலையால் மூடி வைக்க வேண்டும்.
* பின்பு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் இட்லி தட்டை வைத்து, அதன் மேல் வாழை இலையால் மூடிய தட்டைப்பயறை வைத்து, மூடி வைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு வேக வைத்ததை எடுத்து, அதை ஒரு இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்துள்ள துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, மல்லித் தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், புளிச்சாற்றினை சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி கிளறி, 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் பொரித்து வைத்துள்ளதை சேர்த்து, குறைவான தீயில் 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான சைவ மீன் குழம்பு தயார்.

Image Courtesy: kannammacooks

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 5, 2023, 15:28 [IST]
Desktop Bottom Promotion