ராகி களியும், வேர்க்கடலை தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க...

Posted By:

Ragi Kali With Peanut Tomato Chutney In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? நீங்கள் டயட்டில் உள்ளீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் ராகி மாவு இருந்தால், அவற்றைக் கொண்டு களி செய்து சாப்பிடுங்கள். அதுவும் இந்த ராகி களியை குக்கரில் 10 நிமிடத்தில் செய்துவிடலாம். அதுவும், இந்த ராகி களிக்கு காரசாரமான வேர்க்கடலை தக்காளி சட்னி செய்தால், சுவை பிரமாதமாக இருக்கும். இந்த காம்போவை ஒருமுறை முயற்சி செய்யுங்கள். இதனால் ருசியாகவும் இருக்கும், சத்தானதும் கூட. முக்கியமாக சட்டென்று காலை டிபனை முடித்துவிடலாம்.

Ragi Kali With Peanut Chutney How To Make This Healthy Breakfast In 10 Minutes

இந்த ராகி களி மற்றும் வேர்க்கடலை தக்காளி சட்னி குறித்து அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு ராகி களியும், வேர்க்கடலை தக்காளி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி களி மற்றும் வேர்க்கடலை தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ராகி மாவு - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்

சட்னிக்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 3 கைப்பிடி
* வரமிளகாய் - 4
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தை எடுத்து, அதில் 1 கப் ராகி மாவை எடுத்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி, கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த பாத்திரத்தை அப்படியே அடுப்பில் வைத்து, கெட்டியாகும் வரை கைவிடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* ராகி கெட்டியானதும், அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரினுள் வைக்கும்படியான ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் இந்த ராகி மாவை சேர்த்து, நீர்புகாதவாறு தட்டு கொண்டு மூடி, பின் குக்கரினுள் இந்த பாத்திரத்தை வைத்து, மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பாத்திரத்தை திறந்து, ராகி மாவை கரண்டியால் எடுத்து உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொண்டால், ராகி களி தயார்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து முதலில் வறுக்க வேண்டும்.
* பின் அதில் வறுத்த வேர்க்கடலை, வரமிளகாயை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கயி வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிய துண்டு புளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், வேர்க்கடலை தக்காளி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, May 20, 2026, 6:51 [IST]
Desktop Bottom Promotion