கறிவேப்பிலையும், பூண்டும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு தொக்கு செய்யுங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்

Posted By:

Poondu Karuveppilai Thokku Recipe in Tamil: பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி மற்றும் சாம்பார் போன்றவற்றைத்தான் அனைத்து வீடுகளிலும் சைடிஷாக செய்வார்கள். எதுவுமே இல்லாத சமயத்தில் இட்லி பொடி கூட வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் யாரும் இட்லி, தோசைக்கு தொக்கு செய்திருக்க மாட்டார்கள். ஏனெனில் தொக்கு என்றாலே பொதுவாக அது சாதத்திற்கு என்ற நம்பிக்கை நம்மிடம் வந்து விட்டது.

உண்மையில் இட்லி, தோசைக்கு தொக்கு வகைகள் அட்டகாசமாக இருக்கும். அதிலும் நாம் இப்போது பார்க்கப்போகும் கறிவேப்பிலை பூண்டு தொக்கை 1 வாரம் வரை கூட வைத்து சாப்பிடலாம். இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Poondu Karuveppilai Thokku Recipe How to Make Poondu Karuveppilai Thokku

உங்களுக்கு கறிவேப்பிலை பூண்டு தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை பூண்டு தொக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்:

- நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
- வர மிளகாய் - 8
- மல்லி விதை - ஒரு டேபிள் ஸ்பூன்
- மிளகு - ஒரு டீஸ்பூன்
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு
- பூண்டு - ஒரு கைப்பிடி அளவு
- பெருங்காயம் - 2 சிட்டிகை
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

- முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். கடாய் சூடானதும் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் வர மிளகாய், புளி இரண்டையும் சேர்த்து எண்ணெயில் வதக்க வேண்டும்.

- வர மிளகாய் சிவந்த பிறகு அதில் தனியா, மிளகு, சீரகம், அரை டீஸ்பூன் கடுகு, வெந்தயம் இவற்றை சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும்.

- இவை அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகு நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேவையான அளவு உப்பை சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ள வேண்டும்.

- இவற்றை அரைத்தப் பிறகு இதில் பொடித்த வெல்லத்தையும், இரண்டு கைப்பிடி அளவு கறிவேப்பிலையும் சேர்த்து அரைப்படுவதற்கு அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- இப்பொழுது மறுபடியும் அடுப்பில் கடாயை வைத்து மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றி அதில் அரை டீஸ்பூன் அளவு கடுகு சேர்க்க வேண்டும்.

- கடுகு வெடித்ததும் தோல் உரிக்கப்பட்ட பூண்டு ஒரு கைப்பிடி அளவு சேர்த்து பூண்டு நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

- பிறகு இதில் பெருங்காயத்தூள், மஞ்சள், ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் விழுது அனைத்தையும் சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

- பத்து நிமிடம் கழித்து இதை திறந்து பார்க்கும் பொழுது எண்ணெய் அனைத்தும் மேலே வந்து தொக்கு பதத்திற்கு வந்திருக்கும். சுவையான பூண்டு கருவேப்பிலை தொக்கு தயாராகிவிட்டது.

- இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம், இல்லையெனில் இட்லி, தோசை, சப்பாத்திக்கு சைடிஷாகவும் வைத்து சாப்பிடலாம்.

- இதில் சேர்க்கக்கூடிய அனைத்து பொருட்களும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவையாக இருப்பதால் இது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 16, 2025, 15:49 [IST]
Desktop Bottom Promotion