இட்லி, தோசைக்கு ஒருமுறை இந்த 4 பொருளை மட்டும் வெச்சு சட்னி செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..

Posted By:

Poondu Kara Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பெரும்பாலும் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசைக்கு காரமாகவும், புளிப்பாகவும் சட்னி இருக்க வேண்டுமென விரும்புவார்களா? அப்படியானால் வீட்டில் பூண்டுடன், சின்ன வெங்காயம், வரமிளகாய், புளி இருந்தால் போதும், இவற்றைக் கொண்டு அற்புதமான சுவையில் சட்னியை செய்யலாம்.

இந்த பூண்டு கார சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த சட்னியில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால், இந்த சட்னி 2-3 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும். இந்த பூண்டு கார சட்னி ஆரோக்கியமான சட்னி என்றும் கூறலாம்.

Poondu Kara Chutney How to Make A Garlic Chilli Chutney Recipe

ஏனெனில் இதில் பூண்டு அதிகமாக சேர்க்கப்படுகிறது. பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அடிக்கடி பூண்டை உணவில் சேர்க்கும் போது, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும், உடல் எடை குறையும், இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியும் வலுபெறும். முக்கியமாக இந்த சட்னி 10 நிமிடத்திலேயே செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு பூண்டு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கார சட்னி ரெசியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பூண்டு - 25 பல்
* சின்ன வெங்காயம் - 25
* புளி - 1 எலுமிச்சை அளவு
* வரமிளகாய் - 20
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் வரமிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் புளி சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அப்படி கிளறி விடும் போது, அவ்வப்போது நல்லெண்ணெய் சேர்த்து கிளறி விட வேண்டும். ஒரு கட்டத்தில் சட்னியானது சட்டியில் ஒட்டாமல் திரண்டு வரும், அது தான் சரியான பதம். இந்த கட்டத்தில் அடுப்பை அணைத்து விட்டால், சுவையான பூண்டு கார சட்னி தயார்.

Image Courtesy: Jeyashri's Kitchen

[ of 5 - Users]
Story first published: Thursday, March 7, 2024, 7:07 [IST]
Desktop Bottom Promotion