வாரம் 2 முறை பிரண்டையை இப்படி துவையல் செஞ்சு சாதத்துடன் சாப்பிடுங்க.. கை, கால் வலி பறந்து போயிடும்...

Posted By:

Pirandai Thuvaiyal Recipe In Tamil: தற்போது மக்களிடையே பிரண்டை பிரபலமாகி வருகிறது. நிறைய பேர் பிரண்டையை தங்கள் வீடுகளில் வளர்த்து, அவ்வப்போது வீட்டில் சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். ஏனெனில் பிரண்டையானது கை, கால், மூட்டு வலிகளில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்கும். ஆனால் நிறைய பேருக்கு பிரண்டையை எப்படி சமைப்பது என்று தெரியவில்லை.

பொதுவாக பிரண்டையை துவையல் செய்தால் தான் சுவையாக இருக்கும். பிரண்டை துவையலானது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பிரண்டை துவையல் செய்தால், ஒரு வாரம் வரை வெளியே வைத்து சாப்பிடலாம். அதுவே ஃப்ரிட்ஜ் என்றால் 1 மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். ஆனால் பிரண்டை துவையலை தினமும் சாப்பிடக்கூடாது. வாரத்திற்கு 2 முறை தான் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் உடல் சூடு பிடித்துவிடும்.

Pirandai Thuvaiyal How To Make a Pirandai Thuvaiyal Recipe

உங்களுக்கு பிரண்டை துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரண்டை துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6-7
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* இஞ்சி -250 கிராம்
* முழு பூண்டு - 1
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரண்டை - 2 கையளவு
* புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு..

* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் பிரண்டையை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு முதலில் கைகளில் உப்பு அல்லது எண்ணெயை தடவிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கையில் அரிப்பை சந்திக்க நேரிடும். பின் பிரண்டையை உடைத்து, அதில் உள்ள நார் பகுதியை நீக்க வேண்டும். அதேப் போல் 2 கையளவு பிரண்டையை எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரை பிஞ்சு பிரண்டையை பயன்படுத்துவது நல்லது. இதனால் சுத்தம் செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் மல்லி, மிளகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்து குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி அதையும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சுத்தம் செய்த பிரண்டையை சேர்த்து, நிறம் மாறி சுருங்கி பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த மசாலா பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பூண்டு, வதக்கிய பிரண்டை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, அரைத்த துவையலை சேர்த்து, நன்கு சுருண்டு நிறம் மாறி எண்ணெய் பிரியும் வரை கிளறி விட்டு வேக வைத்து இறக்கினால், சுவையான பிரண்டை துவையல் தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Saturday, May 11, 2024, 14:48 [IST]
Desktop Bottom Promotion