காய்கறி இல்லாத நேரத்துல இந்த புதுமையான பருப்பு வறுத்த குழம்பை செய்யுங்க.. சட்டி சோறு நொடியில் காலியாகும்..

Posted By:

Paruppu Varutha Kulambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் மதியம் சமைக்க காய்கறி எதுவும் இல்லை? சட்டென்று சமையலை முடிக்க வேண்டுமா? அப்படியானால் பருப்பு வறுத்த குழம்பை செய்யுங்கள். இந்த குழம்பு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.

முக்கியமாக இந்த குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும். ஒருமுறை இந்த பருப்பு வறுத்த குழம்பை செய்தால், பின் வாரம் ஒருமுறை இந்த குழம்பை செய்ய சொல்லி கேட்பார்கள். பேச்சுலர்கள் கூட இந்த குழம்பை செய்யலாம். அந்த அளவு செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

Paruppu Varutha Kulambu How To Make a Paruppu Varutha Kulambu

உங்களுக்கு பருப்பு வறுத்த குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு வறுத்த குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 கப்
* வரமிளகாய் - 7
* பூண்டு - 10 பல்
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* தண்ணீர் - 2 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 1 கப் துவரம் பருப்பை சேர்த்து, மிதமான தீயில் வைத்து, சிறிது நேரம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், பூண்டு, நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்து, பருப்பு பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்க வேண்டும்.
* பிறகு குக்கரில் வறுத்த பொருட்களை போட்டு, அதில் 2 1/2 கப் நீரை ஊற்றி கலந்து, குக்கரை மூடி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் மஞ்சள் தூள், புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, மத்து கொண்டு நன்கு மசித்து விட்டு, அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், வரமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* இறுதியாக தாளித்ததை கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறினால், சுவையான வறுத்த பருப்பு குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, December 26, 2025, 13:51 [IST]
Desktop Bottom Promotion