1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க...

Posted By:

Paal Poori Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் பசிக்கிறது என்று சொல்கிறார்களா? அப்போது அவர்களுக்கு வயிறு நிரம்பும் வகையிலும், சற்று ஆரோக்கியமானதாகவும் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் அல்லது மாலை நேர டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் பச்சரிசி உள்ளதா?

அப்படியானால் அந்த பச்சரியைக் கொண்டு மிகவும் ருசியான பால் பூரி செய்து கொடுங்கள். இந்த பால் பூரியை மாலை நேரத்தில் மட்டுமின்றி, காலை நேரத்திலும் சாப்பிடலாம். இது இட்லி, தோசைக்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்கள் விரும்பி சாப்பிடுமாறு அருமையாக இருக்கும்.

Paal Poori How To Make a Milk Poori Recipe

உங்களுக்கு பால் பூரியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பால் பூரி ரெபிசியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி - 1 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்)
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* ரவை - 1/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* கெட்டி தேங்காய் பால் - தேவையான அளவு
* சர்க்கரை - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை எடுத்து, நீரை ஊற்றி, குறைந்தது 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்துள்ள அரிசியை கழுவி போட்டு, அரிசி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு நாண்ஸ்டிக் வாணலியில் அரைத்து அரிசி மாவை எடுத்து, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி ஊற்ற வேண்டும்.
* பிறகு அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அதோடு 1/4 கப் ரவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து, நன்கு தொடர்ந்து கிளறி விட வேண்டும். அப்படி கிளறும் போது மாவானது கெட்டியாகத் தொடங்கும். ஒருகட்டத்தில் மாவு திரண்டு வரத் தொடங்கும். அப்படி திரண்டு வந்தால், மாவு தயார் என்று அர்த்தம். பின் அடுப்பை அணைத்துவிட்டு, மாவை மூடி வைத்து, குளிர வைக்க வேண்டும்.
* மாவானது கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளை நீரில் நனைத்து, மாவை நன்கு மென்மையாக பிசைந்து விட வேண்டும்,
* அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து, பூரி போன்று தேய்த்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை எண்ணெயில் போட்டு, ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
*அனைத்து பூரிகளையும் ப்ரை செய்து எடுத்த பின், ஒரு அகலமான பாத்திரத்தில் கெட்டியான தேங்காய் பாலை எடுத்து, அதில் சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் பூரிகளை அந்த தேங்காய் பாலுடன் சேர்த்து பரிமாறினால், சுவையான பால் பூரி தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion