நீர் தோசையும்.. இறால் நெய் ரோஸ்ட்டும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...

Posted By:

Neer Dosa And Prawn Ghee Roast Recipe In Tamil: வார இறுதி வந்தாலே உங்கள் வீட்டில் இட்லியும், மட்டன் குழம்பும் தான் காலை டிபனாக இருக்குமா? அப்படியானால் இந்த வார இறுதியில் வழக்கம் போல் இட்லியையும், மட்டன் குழம்பையும் செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக நீர் தோசையையும், இறால் நெய் ரோஸ்ட்டையும் செய்து சாப்பிடுங்கள்.

இந்த காம்பினேஷன் உண்மையில் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவில் பிரமாதமாக இருக்கும். சொல்லப்போனால் ஒருமுறை இந்த காம்போவை ட்ரை செய்தால், பின் அடிக்கடி வார இறுதி நாளில் செய்து சாப்பிடுவீர்கள். முக்கியமாக இறால் பிடிக்காதவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள்.

Neer Dosa And Prawn Ghee Roast How To Make a Neer Dosa With Prawn Ghee Roast

உங்களுக்கு நீர் தோசையும், இறால் நெய் ரோஸ்ட்டும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நீர் தோசை மற்றும் இறால் நெய் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீர் தோசைக்கு தேவையான பொருட்கள்:

* பச்சரிசி - 1 கப்
* துருவிய தேங்காய் - 1 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்

இறால் நெய் ரோஸ்ட்டிற்கு தேவையான பொருட்கள்:

* இறால் - 1 கிலோ
* நெய் - 50 மிலி
* மல்லி - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* முந்திரி - 5
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் பச்சரிசியை நீரில் நன்கு கழுவி, நீரை ஊற்றி 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 3-4 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்த பச்சரிசியை சேர்த்து, அத்துடன் தேங்காயையும் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவானது நீர் போன்று இருக்க வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்போது நீர் தோசைக்கான மாவு தயார்.
* அடுத்து இறால் நெய் ரோஸ்ட் செய்ய, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன், இஞ்சி, பூண்டு, முந்திரி, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் இறாலை சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பை சேர்த்து, மசாலாவில் இருந்து பச்சை வாசனை போக வதக்கி, நெய் பிரியத் தொடங்கியதும், அதில் இறாலை சேர்த்து நன்கு மசாலா இறாலுடன் ஒன்று சேரும் வரை கிளறி மிதமான தீயில் வைத்து, 5-7 நிமிடம் இறாலை வேக வைத்து இறக்கினால், சுவையான இறால் நெய் ரோஸ்ட் தயார்.
* இறுதியாக ஒரு தோசை தவாவை அடுப்பில் வைத்து, தவா நன்கு சூடானதும், தீயைக் குறைத்துக் கொண்டு, அதில் மாவை ஊற்றி கரண்டியால் மாவை சுற்றாமல், தவாவை கையில் எடுத்துக் கொண்டு மாவை பரப்பி விட்டு, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, தோசையை திருப்பி போடாமல், அப்படியே எடுத்தால், சுவையான நீர் தோசை தயார். இந்த நீர் தோசையை இறால் நெய் ரோஸ்ட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, January 11, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion