மழை நேரத்துல மட்டன் கொத்துக்கறியை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. பூரி, சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்..

Posted By:

Mutton Kothukari Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருப்பதோடு, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், நன்கு காரசாரமாகவும், வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் ருசியாகவும் சாப்பிட தோன்றும். அதுவும் நிறைய பேருக்கு அசைவ உணவை சாப்பிட ஆசையாக இருக்கும்.

உங்களுக்கும், உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் அப்படி இருந்தால், மட்டன் கீமா வாங்கி வந்து, அதைக் கொண்டு கிரேவி போன்று செய்து சாப்பிடுங்கள். இந்த மட்டன் கொத்துக்கறி பூரி, சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். ஒருமுறை மட்டன் கொத்துக்கறியை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

Mutton Kothukari How To Make a Mutton Keema Curry

உங்களுக்கு மட்டன் கொத்துக்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் கொத்துக்கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 5-7 பல்
* புதினா - 15 இலைகள்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கற்ப
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* மட்டன் கீமா - 300 கிராம்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி, இஞ்சி, பூண்டு, புதினா இலைகளை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மட்டன் கீமாவை நீரில் நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின் அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து கழுவி வைத்துள்ள மட்டன் கீமாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2-3 விசில் விட வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான மட்டன் கொத்துக்கறி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 14, 2025, 19:30 [IST]
Desktop Bottom Promotion