2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

Posted By:

Murungai Keerai Sambar Recipe In Tamil: உணவில் அடிக்கடி கீரையை சேர்ப்பது மிகவும் நல்லது என்பதை அனைவரும் அறிவோம். அதுவும் கீரைகளில் விலைக் குறைவில் மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய கீரை தான் முருங்கைக்கீரை. இந்த கீரையை பொதுவாக பொரியல் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இந்த கீரை பொரியல் சற்று கசப்புச்சுவையை கொண்டிருப்பதால், குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள்.

Murungai Keerai Sambar How To Make Drumstick Leaves Sambar Recipe

ஆனால் முருங்கைக்கீரையைக் கொண்டு சாம்பார் செய்யும் போது, அதன் கசப்புச்சுவையும் தெரியாது, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் இரத்தம் குறைவாக இருக்கும் இரத்த சோகை நோயாளிகள் உட்கொண்வது மிகவும் நல்லது. இதனால் விரைவில் இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். இந்த முருங்கைக்கீரை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 100 கிராம்
* பூண்டு - 4 பல்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1
* உளுத்தம் பருப்பு - 1
* சீரகம் - 1/4
* வெந்தயம் - 1/4
* சின்ன வெங்காயம் - 15
* பச்சை மிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* வேக வைத்த பருப்பு
* தண்ணீர் - தேவையான அளவு
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் குக்கரில் துவரம் பருப்பை எடுத்து, நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த கழுவி பருப்புடன் பூண்டு, நறுக்கிய 2 தக்காளி, தேவையான அளவு நீர், மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலந்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பையும், தக்காளியையும் நன்கு மசித்து விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள், சாம்பார் தூள் சேர்த்து 30 நொடிகள் கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, சாம்பாருக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து நன்கு 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக மூடியைத் திறந்து, அதில் முருங்கைக்கீரையை நீரில் கழுவி சேர்த்து கிளறி, 5 நிமிடம் கீரையை வேக வைத்து இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை சாம்பார் தயார்.

Image Courtesy:

[ of 5 - Users]
Story first published: Monday, June 29, 2026, 13:27 [IST]
Desktop Bottom Promotion