முள்ளங்கி கொண்டு ஒருடைம் இப்படி குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா அள்ளும்...

Posted By:

Mullangi Kurma Recipe In Tamil: நைட் உங்கள் வீட்டில் எப்போதும் சப்பாத்தி தான் டின்னரா? அந்த சப்பாத்திக்கு ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் முள்ளங்கி சாப்பிடமாட்டார்களா?

இருப்பினும் முள்ளங்கியைக் கொண்டு குருமா செய்யும் போது, அதன் சுவையே தெரியாது மற்றும் குருமாவும் அட்டகாசமான ருசியுடன் இருக்கும். இந்த முள்ளங்கி குருமா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Mullangi Kurma How To Make a Radish Kurma For Chapati

உங்களுக்கு முள்ளங்கி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முள்ளங்கி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முள்ளங்கி - 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* கடலைப்பருப்பு - 1/4 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கறி மசாலா தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* முந்திரி - 6-7
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காய், கசகசா, முந்திரி சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறி மசாலா தூள் சேர்த்து 1 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு நறுக்கி வைத்துள்ள முள்ளங்கியை சேர்த்து, அத்துடன் கடலைப் பருப்பை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான முள்ளங்கி குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, December 16, 2024, 20:05 [IST]
Desktop Bottom Promotion