கும்பகோணம் ஸ்பெஷல் வத்த குழம்பு ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... ஹோட்டலில் சாப்பிடற மாதிரியே இருக்கும்...!

Posted By:

Kumbakonam Vatha Kulambu Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிக்குழம்புதான் தினமும் சமைக்கும் பிரதான குழம்புகளாக இருக்கும். அதனால்தான் ஹோட்டல்களுக்கு சென்றால் அனைவரும் காரக்குழம்பு மற்றும் வத்தக் குழம்பு போன்றவற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். வத்தக் குழம்பு வைக்கும் பக்குவம் தெரியாததால்தான் பெரும்பாலானவர்கள் அதை செய்வதில்லை.

வத்தக் குழம்புகளில் பல வகைகள் உள்ளது, அதிலும் கும்பகோணம் வத்தக் குழம்பு மிகவும் பிரபலமானது மற்றும் தனித்துவமானது. கும்பகோணம் வத்தக் குழம்பு சாப்பிட அங்குதான் செல்ல வேண்டுமென்று அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே சூப்பராக செய்து சாப்பிடலாம். இதற்கு தேவையெல்லாம் ஒரு ஸ்பெஷல் பொடிதான்.

Kumbakonam Vatha Kulambu Recipe How to Make Kumbakonam Vatha Kuzhambu

உங்களுக்கு கும்பகோணம் வத்தக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கும்பகோணம் வத்தக் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- சுண்டல் வத்தல் அல்லது மாங்காய் வத்தல் - 1 கப்
- கெட்டியான புளி சாறு - 1 கப்
- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு - 5 பல்
- நறுக்கிய தக்காளி - 1
- சர்க்கரை - 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு

அரைக்க:

- உளுத்தம்பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
- வர மிளகாய் - 5
- கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்

செய்முறை:

- வத்தலை முதலில் 10 நிமிடம் சூடான நீரில் ஊற வைக்கவும். இது வத்தலில் உள்ள அசுத்தங்களை நீக்கி எளிதில் வேக உதவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு வறுத்து, பொடியாக அரைத்து தனியாக வைக்கவும்.

- ஒரு ஆழமான பாத்திரத்தில், நல்லெண்ணெய் சேர்த்து கடுகு போட்டு தாளிக்கவும்.

- கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் போட்டு தாளிக்கவும்.

- பின்னர் ஊற வைத்த வத்தலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

- பின் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து மீண்டும் வதக்கவும். வெங்காயம் மென்மையாக மாறியதும், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

- தக்காளி நன்கு குழைந்ததும் கெட்டியான புளி தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

- பின்னர் அரைத்த ஸ்பெஷல் பொடியைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்தால் சூப்பரான கும்பகோண வத்தல் குழம்பு ரெடி. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி சூடாகப் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, February 18, 2026, 17:31 [IST]
Desktop Bottom Promotion