கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் தட்டை - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Krishna Jayanthi Special Thattai Recipe: கிருஷ்ண ஜெயந்தி வரப்போகிறது. என்ன பலகாரங்களை செய்வதென்று யோசித்து, பலரும் பட்டியல் போட்டுக் கொண்டிருப்பார்கள். நீங்களும் அப்படி பட்டியல் போடுகிறீர்களா? அப்படியானால் அந்த பட்டியலில் மறக்காமல் கிருஷ்ணருக்கு பிடித்த தட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆம், கிருஷ்ணருக்கு தட்டை ரொம்ப பிடிக்கும். எனவே இந்த தட்டையை கிருஷ்ண ஜெயந்தி நாளில் செய்து படைத்து வழிபாடு செய்யுங்கள். மேலும் தட்டை அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ். ஒருமுறை செய்து வைத்தால் 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த தட்டையை 10 நிமிடத்தில் செய்துவிடலாம்.

Krishna Jayanthi Special Recipe How To Make a Thattai Recipe

உங்களுக்கு தட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வறுத்த அரிசி மாவு - 1 கப்
* வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* ஊற வைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* ஊற வைத்த கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* வெண்ணெய் - 1 1/4 டேபிள் ஸ்பூன்
* வறுத்த எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* வெதுவெதுப்பான நீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் வறுத்த அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் வறுத்து அரைத்த உளுத்தம் மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 2 டேபிள் ஸ்பூன் ஊற வைத்த பாசிப்பருப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஊற வைத்த கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் சிறிது நீரில் பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கரைத்து, அதில் வடிகட்டி ஊற்ற வேண்டும்.
* அடுத்து அதில் 1 1/4 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கைகளால் நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பிறகு அதில் வறுத்த எள்ளு விதைகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு துணியை எடுத்து, அதில் பிசைந்த மாவை சிறிது எடுத்து உருட்டி ஓரளவு தடிமனாக தட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்துள்ள தட்டைகளைப் போட்டு, பொரித்து எடுத்தால், சுவையான தட்டை தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, August 14, 2025, 18:20 [IST]
Desktop Bottom Promotion