கோவைக்காய் வாங்குனா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...

Posted By:

Kovakkai Chutney In Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசை தான் செய்வீர்களா? அந்த இட்லி தோசைக்கு பொருத்தமான சைடு டிஷ் என்றால் அது சட்னி தான். சட்னியில் பல உள்ளன. அதில் பெரும்பாலும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியை தான் செய்வோம். இப்படி ஒரே சட்னியை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?

அப்படியானால் வீட்டில் கோவைக்காய் இருந்தால், அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள். என்னது கோவைக்காயில் சட்னியா என்று கேட்கலாம். ஆனால் உண்மையிலேயே கோவைக்காய் கொண்டு செய்யப்படும் சட்னி அருமையான சுவையில் இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். இந்த சட்னியை துவையல் போன்று சற்று கொரகொரவென்று அரைத்து, சூடான சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

Kovakkai Chutney How To Make a Kovakkai Chutney

உங்களுக்கு கோவைக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வேர்க்கடலை - 50 கிராம்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கட்டி பெருங்காயம் - சிறிய துண்டு
* வரமிளகாய் - 4

வதக்குவதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 1 பல்
* சின்ன வெங்காயம் - 12
* கோவைக்காய் - 1/4 கிலோ
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் கோவைக்காயை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து நன்கு மொறுமொறுவென்று மாறும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கட்டிப் பெருங்காயம் சேர்த்து வறுத்து இறக்கி, அதையும் தட்டில் எடுத்து குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய கோவைக்காயை சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை, உளுத்தம் பருப்பு, கட்டி பெருங்காயம், வரமிளகாயை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கிய கோவைக்காயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான கோவைக்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 13, 2025, 8:53 [IST]
Desktop Bottom Promotion