கொத்தமல்லி தண்ணி சட்னி - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Kothamalli Thanni Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அதற்கு சைடு டிஷ்ஷாக எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி சற்று அதிகமாக உள்ளதா? அப்படியானால் அந்த கொத்தமல்லியை கொண்டு சட்னி செய்யுங்கள்.

அதுவும் வழக்கமாக செய்வது போன்று மல்லி சட்னியை செய்யாமல், ஒருசில பொருட்களை வதக்கி அரைத்து சட்னி செய்யுங்கள். இப்படி கொத்தமல்லி சட்னியை செய்யும் போது, சுவை புதுமையாகவும் அருமையாகவும் இருக்கும். மேலும் இந்த சட்னி சத்தானதும் கூட. ஒருமுறை இப்படி சட்னியை செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

Kothamalli Thanni Chutney How To Make a Coriander Thanni Chutney Recipe

உங்களுக்கு கொத்தமல்லி தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* பச்சை மிளகாய் - 1-2
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* கொத்தமல்லி - 2 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு, பச்சை மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 2 கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, தண்ணி சட்னி என்பதால் தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான கொத்தமல்லி தண்ணி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, December 20, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion