மதியம் சாதத்துக்கு கல்யாண வீட்டு கேரட் பீன்ஸ் கூட்டு செய்வது எப்படி-ன்னு தெரியுமா?

Posted By:

Kalyana Veetu Carrot Beans Kootu Recipe In Tamil: மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? சிம்பிளாக, அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஏதாவது ஒன்றை சமைக்க நினைக்கிறீர்களா?

வீட்டில் கேரட் பீன்ஸ் இருந்தால், அதைக் கொண்டு கல்யாண வீட்டு கேரட் பீன்ஸ் கூட்டு செய்யுங்கள். இந்த கூட்டு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

Kalyana Veetu Carrot Beans Kootu How To Make a Kalyana Veetu Carrot Beans Kootu

உங்களுக்கு கல்யாண வீட்டு கேரட் பீன்ஸ் கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு கேரட் பீன்ஸ் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 10 (நீளவாக்கில் வெட்டியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு...

* தேங்காய் - 2 சில்லு
* பச்சை மிளகாய் - 3
* சீரகம் - 3/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவி, 1/2 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் நறுக்கிய கேரட், பீன்ஸ், பூண்டு, ஊற வைத்த பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் பருப்பை கிளறி விட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் வேக வைத்த கேரட் பீன்ஸை அப்படியே சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, நீர் ஓரளவு வற்றும் வரை வதக்க வேண்டும்.
* இறுதியாக அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு கேரட் பீன்ஸ் கூட்டு தயார்.

Image Courtesy: Apoorvaa's Virundu

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 4, 2024, 11:52 [IST]
Desktop Bottom Promotion