இட்லிக்கு ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Kadala Paruppu Kara Chutney Recipe In Tamil: காலையில் இட்லிக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பொதுவாக இட்லிக்கு சட்னி தான் சரியான சைடு டிஷ்ஷாக இருக்கும். அதுவும் சட்னி என்றாலே தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னியைத் தான் செய்வீர்களா?

அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் கடலைப் பருப்பு இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான சுவையில் ஒரு கார சட்னியை செய்யுங்கள். இந்த கடலைப்பருப்பு கார சட்னி இட்லியுடன் மட்டுமின்றி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

Kadala Paruppu Kara Chutney How To Make a Chana Dal Kara Chutney Recipe

உங்களுக்கு கடலைப்பருப்பு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப்பருப்பு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 3
* பூண்டு - 10 பல்
* வரமிளகாய் - 7
* புளி - 1 சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் பூண்டு, வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, ஒருமுறை அரைத்துவிட்டு, பின் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கடலைப்பருப்பு கார சட்னி தயார்.

Image Courtesy: Apoorvas Nalabagam

[ of 5 - Users]
Desktop Bottom Promotion