ஸ்கூல் முடிந்து பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஜவ்வரிசி வெச்சு இப்படி ஒருமுறை செஞ்சு கொடுங்க..

Posted By:

Javvarisi Urundai Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சத்தான, அதே சமயம் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா?

அப்படியானால் அந்த ஜவ்வரிசியைக் கொண்டு ஒரு அருமையான ஸ்வீட் செய்து கொடுங்கள். அதுவும் தேங்காயை உள்ளே வைத்து உருண்டை பிடித்து, வேக வைத்து, சர்க்கரை பாகுவில் ஊற வைத்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களின் பசியும் அடங்கும்.

Javvarisi Urundai How To Make a Coconut Filled Sago Balls Recipe

உங்களுக்கு இந்த ஜவ்வரிசி உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி உருண்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ஜவ்வரிசி - 200 கிராம்
* சுடுநீர் - தேவையான அளவு
* உப்பு - 1/4 டீஸ்பூன்

உள்ளே வைப்பதற்கு...

* தேங்காய் - 1/4 மூடி
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை பாகுவிற்கு...

* சர்க்கரை - 200 கிராம்
* தண்ணீர் - தேவையான அளவு
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு, சுடுநீர் சேர்த்து கரண்டியால் கிளறி, அத்துடன் சிறிது உப்பு தூவி நன்கு கிளறி, 2 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் தேங்காயை எடுத்து துருவிக் கொள்ள வேண்டும்.
* பின் துருவிய தேங்காயை கிண்ணத்தில் எடுத்து, அத்துடன் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் ஆன பின், ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை கையால் லேசாக பிசைந்து, பின் சிறிது ஜவ்வரியை எடுத்து அதை தட்டையாக தட்டி, அதன் நடுவே சிறிது தேங்காய் கலவையை வைத்து மூடி உருண்டையாக பிடித்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் ஒரு 6-7 ஜவ்வரிசி உருண்டைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். உருண்டை பிடிக்கும் போது அதிகமாக அழுத்தம் கொடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் கல் போன்று இருக்கும்.
* பின்பு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி இந்த உருண்டைகளை உள்ளே வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் சர்க்கரை மற்றும் பாகுவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து, சர்க்கரையை கரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஜவ்வரிசி வெந்ததும், அந்த உருண்டைகளை எடுத்து சர்க்கரை பாகுவில் போட்டு, 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இந்த ஜவ்வரிசி உருண்டையை பரிமாறும் போது, மேலே சிறிது சர்க்கரை பாகுவை ஊற்றி பரிமாறுங்கள். இப்போது ஜவ்வரிசி உருண்டை தயார்.

Image Courtesy: Sharmis Passions

[ of 5 - Users]
Story first published: Thursday, March 7, 2024, 17:45 [IST]
Desktop Bottom Promotion