மழை பெய்யும் போது சாப்பிட ஏற்ற.. சுவையான.. கோயம்புத்தூர் ஸ்டைல் காளான்

Posted By:

Coimbatore Style Kalan Recipe In Tamil: வடதமிழகத்தில் மிச்சாங் சூறாவளி காரணமாக கடுமையான மழை பெய்து கொண்டிருக்கிறது. அடுத்த இரண்டு நாட்கள் பலத்த காற்றுடன் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியே செல்ல முடியாத நிலையில் வடதமிழகத்தில் உள்ள பலரும் இருப்பார்கள்.

இந்நிலையில் மழைக்காலத்தில் வீட்டில் இருந்தால், ஏதாவது செய்து சாப்பிடத் தோன்றும். குறிப்பாக சாட் உணவுகளை சாப்பிட பலருக்கும் ஆசை எழும். நீங்கள் சாட் பிரியர் என்றால், அதுவும் ரோட்டுக்கடை காளானை விரும்பி சாப்பிடுவீர்களானால், அந்த காளானை கோயம்புத்தூர் ஸ்டைலில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

Coimbatore Style Kalan Recipe

இதற்கு காளானானும், முட்டைக்கோஸும் இருந்தால் போதும். அருமையான சுவையான கோயம்புத்தூர் ஸ்டைல் காளானை செய்யலாம். உங்களுக்கு கோயம்புத்தூர் ஸ்டைல் காளானை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோயம்புத்தூர் ஸ்டைல் காளான் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டைக்கோஸ் - 3 கப் (நறுக்கியது)
* காளான் - 1 பாக்கெட் (பொடியாக நறுக்கியது)
* மைதா - 1/4 கப்
* சோளமாவு - 1/4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

மசாலா அரைப்பதற்கு...

* பூண்டு - 6-7 பல்
* தக்காளி - 2
* சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச்
* பட்டை - 1/2 இன்ச்
* கிராம்பு - 3
* புதினா இலைகள் - சிறிது

கிரேவிக்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - சிறிது

செய்முறை:

* முதலில் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேப் போல் காளானையும் பொடியாக நறுக்கிய தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் நறுக்கிய முட்டைக்கோஸ், காளான், மைதா, சோள மாவு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி 20 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற வைக்கும் போது அதிலிருந்து நீர் விட்டு, சரியான பதத்திற்கு வரும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை சிறிது எடுத்து உருண்டைகளாக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்தையும் சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் மசாலா அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்சர் ஜாரில் சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 5-6 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு பௌலில் சோள மாவை எடுத்து, அதில் நீரை ஊற்றி கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சோள மாவு நீரை ஊற்றி, தீயைக் குறைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கிரேவியானது சற்று கெட்டியாகத் தொடங்கும். அப்போது சிறிது சர்க்கரை சேர்த்து கிளறி, எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக பொரித்து வைத்துள்ள பக்கோடாவை சேர்த்து நன்கு கிளறி, நீர் வற்றும் வரை அடுப்பில் வேக வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கோயம்புத்தூர் ஸ்டைல் காளான் தயார்.

Image Courtesy: kannammacooks

[ of 5 - Users]
Desktop Bottom Promotion