சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்

Posted By:

Chow Chow Poricha Kulambu Recipe in Tamil: மதியம் சிம்பிளா அதிகம் மெனக்கெடாம சமையலை முடிக்க நினைக்கிறீங்களா? உங்கள் வீட்டில் சௌ சௌ உள்ளதா? அப்படியானால் அதை வைத்து சூப்பரான ஒரு பொரிச்ச குழம்பு செய்யுங்கள். இந்த பக்குவத்தில் சௌ சௌ பொரிச்ச குழம்பு செய்யும் போது, அது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Chow Chow Poricha Kulambu Recipe How to Make at Home in Tamil

மேலும் இந்த சௌ சௌ பொரிச்ச குழம்பு செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை எளிதாக செய்யலாம். முக்கியமாக இந்த குழம்பு நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், சௌ சௌ பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். சௌ சௌ சாம்பார், பொரியலாக சாப்பிட்டே போரடித்தவர்கள் இந்த குழம்பை முயற்சி செய்து பார்க்கலாம். மேலும் இது எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் இது பொருத்தமான தேர்வாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு சௌ சௌ பொரிச்ச குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ பொரிச்ச குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- சௌசௌ - 2 (சிறியவை)
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க

வறுத்து அரைக்க வேண்டியவை:

- தனியா - 2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- மிளகு - 1/2 ஸ்பூன்
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 2
- வர மிளகாய் - 2
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
- தக்காளி - 1

செய்முறை:

- சௌ சௌவைக் கழுவி, தோலை உரித்து, சதுரங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

- ஒரு கடாயில், கொத்தமல்லி விதைகள், வர மிளகாய், சீரகம், மிளகு, பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றை வறுக்கவும்.

- வறுத்த பொருட்கள் ஆறியதும், அதை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காயைச் சேர்த்து கொரகொரப்பான பொடியாக அரைக்கவும்.

- இறுதியாக, நறுக்கிய ஒரு தக்காளியைச் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதைத் தனியே எடுத்து வைக்கவும்.

- ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.

- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துச் சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் நறுக்கிய சௌசௌ துண்டுகள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

- அதன்பின் அரைத்து வைத்துள்ள தக்காளி மசாலா விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கலக்கவும்.

- உப்பின் அளவை சரிபார்த்து, குக்கரை மூடி குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.

- பிரஷர் தானாக அடங்கியதும் குக்கரைத் திறக்கவும். இப்போது எண்ணெய் மிதக்கும் சுவையான சௌ சௌ பொரிச்ச குழம்பு தயார்.

- இறுதியாகக் கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்து அடுப்பை அணைக்கவும். இது சாதம், இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 16, 2026, 15:03 [IST]
Desktop Bottom Promotion