வாழைக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பிரட்டல் செய்யுங்க... எல்லா சாதத்தோடயும் சாப்பிட செமையா இருக்கும்!

Posted By:

Chettinad Vazhakkai Perattal Recipe in Tamil: உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? எப்போது வாழைக்காயை வாங்கினாலும், அதை பொடியாக நறுக்கி பொரியல் போன்றோ அல்லது பஜ்ஜியாகவோ தான் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் அடுத்தமுறை வாழைக்காயை வாங்கினால், அதைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் வறுவல் செய்யுங்கள். செட்டிநாடு உணவுகள் என்றாலே மிகவும் சுவையானவைதான், அதிலும் இந்த வாழைக்காய் பிரட்டல் மட்டன் சுவையில் இருக்கும்.

இந்த செட்டிநாடு வாழைக்காய் பிரட்டல் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் என அனைத்துடன் பொருத்தமாக இருக்கும். முக்கிய இப்படி வறுவல் செய்தால், வாழைக்காய் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை இந்த வறுவலை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்கச் சொல்லி கேட்பார்கள். இது சுவயைத இருப்பதுடன் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும்.

Chettinad Vazhakkai Perattal Recipe How to Make Chettinad Vazhakkai Perattal

உங்களுக்கு செட்டிநாடு வாழைக்காய் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- வாழைக்காய் - 1
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - 1/4 ஸ்பூன்

தாளிக்க:

- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
- மிளகு - 4
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- சோம்பு - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- தேவையான அளவு உப்பு

மசாலா அரைக்க:

- தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5
- வரமிளகாய் - 7
- சோம்பு - 1/4 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- கசகசா - 1/4 ஸ்பூன்

செய்முறை:

- வாழைக்காயை தோல் உரித்து விரும்பிய வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.

- மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடங்கள் தனியாக வைக்கவும்.

- ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மசாலா தடவிய வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு, எல்லாப் பக்கமும் சமமாக வேகும் வரை நன்றாக வறுத்தெடுக்கவும்.

- அதேசமயம் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

- மசாலா அரைக்க கொடுத்துள்ளப் பொருட்களை மிக்சி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

- மிளகை உடைத்து வைத்துக் கொள்ளவும்.

- ஒரு கனமான கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

- எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் சீரகம், உளுத்தம் பருப்பு, சோம்பு, உடைத்த மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.

- தக்காளி மென்மையானதும், அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து, அது வாசனை வரும் வரை மற்றும் கெட்டியாகும் வரை வதக்கவும்.

- ​​பின்னர் வறுத்த வாழைக்காயைச் சேர்த்து, மசாலா எல்லா இடங்களிலும் பரவும்படி மெதுவாகக் கலக்கவும். மசாலா காய்கறியில் நன்கு சேரும் வரை, மிதமான தீயில் நன்றாக கிளறவும்.

- மசாலா நன்றாக ஒட்டி வாழைக்காயில் மசாலா சேர்ந்ததும் அடுப்பை அணைத்தால் சுவையான செட்டிநாடு வாழைக்காய் பிரட்டல் ரெடி!

- இது சாம்பார் சாதம், ரசம் சாதம், எலுமிச்சை சாதம் என அனைத்திற்கும் சூப்பராக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Monday, February 9, 2026, 11:55 [IST]
Desktop Bottom Promotion