செட்டிநாடு பட்டாணி குருமா

நீங்கள் உங்கள் வீட்டில் செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய நினைப்பவரா? அதுவும் இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் இன்று செட்டிநாடு பட்டாணி குருமா செய்யுங்கள்.

Posted By:

தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானவை. இதற்கு அந்த ரெசிபிக்களில் சேர்க்கப்படும் மசாலா தான் காரணம். நீங்கள் உங்கள் வீட்டில் செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய நினைப்பவரா? அதுவும் இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் இன்று செட்டிநாடு பட்டாணி குருமா செய்யுங்கள். இந்த குருமா மிகவும் ருசியாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

Chettinad Pattani Kurma Recipe In Tamil

உங்களுக்கு செட்டிநாடு பட்டாணி குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பட்டாணி குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் மசாலாவிற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்

* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

* கசகசா - 1/2 டீஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* சோம்பு - 1 டீஸ்பூன்

* பட்டை - 1 இன்ச்

* கிராம்பு - 2

* ஏலக்காய் - 1

* துருவிய தேங்காய் - 1/2 கஙப

* பூண்டு - 5 பல்

* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)

* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

பிற பொருட்கள்...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

* சின்ன வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* புளி நீர் - 1/2 கப்

* பச்சை பட்டாணி - 1 கப்

* உப்பு - சுவைக்கேற்ப

* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் தேங்காய் மசாலாவைத் தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பொட்டுக்கடலை, கசகசா, கிராம்பு, பட்டை, சோம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை போட்டு சில நொடிகள் வறுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு அத்துடன் மிளகாய் தூளையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பட்டாணியைப் போட்டு, சிறிது உப்பு மற்றும் அரை கப் நீரை ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, கறிவேப்பிலை, தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

* வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலா, வேக வைத்துள்ள பட்டாணி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அத்துடன் புளி நீர் மற்றும் குருமா பதத்திற்கு தேவையான அளவு நீரையும் ஊற்றி, 3-4 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு பட்டாணி குருமா தயார்.

Image Courtesy: archanaskitchen

[ of 5 - Users]
Desktop Bottom Promotion