2 கேரட் இருந்தா.. இந்த ஸ்டைலில் சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும்...

Posted By:

Carrot Chutney Recipe In Tamil: பொதுவாக கேரட் வாங்கினால், அதைக் கொண்டு பொரியல், சாம்பார் என்று தான் செய்வோம். ஆனால் அந்த கேரட்டைக் கொண்டு சட்னி செய்யலாம் என்பது தெரியுமா? இப்படி கேரட் கொண்டு சட்னி செய்யும் போது, இதுவரை கேரட்டை சாப்பிடாதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவில் இந்த சட்னி ருசியாக இருக்கும்.

முக்கியமாக இந்த சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். உங்கள் பிள்ளைகள் கேரட் சாப்பிட மறுத்து வந்தால், அவர்களுக்கு இப்படி சட்னியாக செய்து கொடுங்கள். இதனால் விரும்பி சாப்பிடுவார்கள். சொல்லப்போனால் அடிக்கடி இந்த சட்னியை செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது கண்களுக்கு மிகவும் நல்லது.

Carrot Chutney How To Make a Healthy Carrot Chutney Recipe

உங்களுக்கு கேரட் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* வரமிளகாய் - 3
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* கேரட் - 1 கப் (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து லேசாக நிறம் மாற வறுக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, வரமிளகாய், வெங்காயம் சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளியை சேர்த்து வதக்கி, நறுக்கிய கேரட்டை சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து, 5-8 நிமிடம் கேரட் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு கேரட் நன்கு வதங்கியதும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கேரட் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 27, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion