மணமணக்கும்.. ஆட்டுக்குடல் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Kudal Kulambu Recipe In Tamil: வார இறுதி வந்தாலே, மட்டன், சிக்கன், மீன் தான் வாங்கி சமைப்பீர்களா? இந்த வாரம் உங்கள் வீட்டில் சற்று ஸ்பெஷலாக சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆட்டு குடல் வாங்கி வந்து குழம்பு செய்யுங்கள். இந்த குடல் குழம்பு இட்லியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மசாலாவை வதக்கி அரைத்து இந்த பக்குவத்தில் குடல் குழம்பை செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Boti Kulambu How To Make Kudal Kulambu Recipe

உங்களுக்கு குடல் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடல் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 2 லிட்டர்
* உப்பு - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
* சுத்தம் செய்த ஆட்டு குடல் - 1 கிலோ

வறுத்து அரைப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 6
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - சிறிது
* மிளகு - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 8
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 1 கப்

குழம்பு தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* குழம்பு மிளகாய் தூள் - 5 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* அரைத்த தேங்காய் விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* சுத்தம் செய்த குடல்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஆட்டுக்குடலை சுத்தமான நீரில் நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த குடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் நீரை ஊற்றி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் குடலை சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் நீரை வடிகட்டிவிட்டு, குடலை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி, மிளகு, சோம்பு, சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில், நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அதில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, முழு பச்சை மிளகாயை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து குழம்பு கொதித்ததும், அதில் சுத்தம் செய்த குடலை சேர்த்து கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து, 5-6 விசில் விட்டு, பின் 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான குடல் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, July 12, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion