1 பீட்ரூட் இருந்தா.. காலையில் இப்படியொரு டிபனை செய்யுங்க.. டேஸ்டியும், ஹெல்த்தியும் கூட...

Posted By:

Beetroot Adai Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரியான டிபனை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ரூட்டைக் கொண்டு அடை செய்யுங்கள்.

இப்படி பீட்ரூட்டைக் கொண்டு அடை செய்யும் போது, பீட்ரூட் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பீட்ரூட் அடைக்கு கொத்தமல்லி கொண்டு செய்யப்படும் சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். முக்கியமாக இந்த அடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Beetroot Adai How To Make a Healthy Beetroot Adai Recipe

உங்களுக்கு பீட்ரூட் அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பீட்ரூட் - 1 (வேக வைத்தது)
* கடலை மாவு - 1 1/2 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* ஓமம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய்/நெய்

சட்னிக்கு...

* கொத்தமல்லி - சிறிய கட்டு
* புதினா - 1 கையளவு
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* பூண்டு - 1
* புளி - சிறிது (நீரில் ஊற வைத்தது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் வேக வைத்த பீட்ரூட்டை துண்டுகளாக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம், ஓமம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த மாவை மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் அடை தோசைக்கு வேண்டிய சட்னியை செய்யலாம். இந்த சட்னிக்கு மிக்சர் ஜாரில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலைகள், துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, நீரில் ஊற வைத்த புளி, சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை கரண்டியால் நன்கு கிளறி விட்டு, ஒரு கரண்டி மாவை எடுத்து, கல்லில் ஊற்றி, லேசாக தேய்த்து, மேலே எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான பீட்ரூட் அடை தயார். இந்த அடையை கொத்தமல்லி சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, July 23, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion