அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி குழம்பு செய்யுங்க.. சும்மா அள்ளும்..

Posted By:

Avaraikkai Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்போது அவரைக்காயை வாங்கினாலும், அதைக் கொண்டு பொரியல் தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை அவரைக்காய் வாங்கினால், அதைக் கொண்டு பொரியலை செய்யாமல், குழம்பு செய்யுங்கள்.

இப்படி அவரைக்காயை குழம்பு செய்யும் போது, அதன் சுவை வேற லெவலில் இருக்கும். அதுவும் ஒருமுறை இந்த குழம்பை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். ஏனெனில் அந்த அளவில் இதன் சுவை இருக்கும். அதோடு இந்த குழம்பு 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குழம்பு செய்யலாம்.

Avaraikkai Kuzhambu How To Make a Broadbeans Kuzhambu

உங்களுக்கு அவரைக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவரைக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* அவரைக்காய் - 250 கிராம்

அரைப்பதற்கு..

* தேங்காய் - 1/4 மூடி
* சின்ன வெங்காயம் - 5-6
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 3 பல் (தட்டியது)
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் அவரைக்காயை சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் 1/4 மூடி நறுக்கிய தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள 3 பல் பூண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, அவரைக்காயை சேர்த்து கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான அவரைக்காய் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, August 14, 2025, 14:00 [IST]
Desktop Bottom Promotion