அரிசி உப்புமாவும்.. வேர்க்கடலை சட்னியும் - காலையில் இத டிபனா செய்யுங்க.. போட்டி போட்டு சாப்பிடுவாங்க...

Posted By:

Arisi Upma Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை டிபனை சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் அரிசி உப்புமாவை செய்யுங்கள். இந்த அரிசி உப்புமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

மேலும் இந்த உப்புமாவிற்கு வேர்க்கடலை சட்னி சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். உங்கள் வீட்டில் இன்னும் காலை உணவை முடிவு செய்யவில்லை என்றால், இந்த அரிசி உப்புமாவை செய்யுங்கள். கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Arisi Upma How To Make a Arisi Upma With Peanut Chutney Recipe

உங்களுக்கு அரிசி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறையை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்ப்டடுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

உப்புமாவிற்கு...

* பச்சரிசி - 1 டம்ளர்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - 1/2 இன்ச்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சுடுநீர் - 3 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1 கப்

சட்னிக்கு...

* வரமிளகாய் - 5
* வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு- சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் நீரை முழுமையாக வடிகட்டிவிட்டு, 10 நிமிடம் உலர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் உலர்த்திய பச்சரிசியை போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த பச்சரிசி மாவை சேர்த்து நன்கு 1 நிமிடம் வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 3 டம்ளர் சுடுநீரை ஊற்றி கட்டிகளின்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீர் ஓரளவு வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* அதற்குள் சட்னியை செய்து கொள்ளலாம். அதற்கு மிக்சர் ஜாரில் வரமிளகாய், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு, புளி, துருவிய தேங்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி லேசான கொரகொரப்புடன் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால், வேர்க்கடலை சட்னி தயார்.
* இப்போது வெந்து கொண்டிருக்கும் உப்புமாவின் மூடியை நீக்கிவிட்டு, உப்புமாவை கிளறினால், சுவையான அரிசி உப்புமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 30, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion