ஆந்திரா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, சூப்பரா இருக்கும்

Posted By:

Andhra Pavakkai Masala Recipe in Tamil: பொதுவாக மக்களுக்கு பிடிக்காத காய்கறிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது பாவக்காய்தான். உங்கள் வீட்டில் உள்ளவர்களும் பாவக்காய் என்றால் அலறி அடித்து ஓடுவார்களா? எப்படி பாவக்காயை செய்தாலும் சாப்பிட மறுப்பார்களா? அப்படிப்பட்டவர்களை பாவக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் பாவக்காயை இந்த பக்குவத்தில் மசாலா செய்து கொடுங்கள்.

Andhra Pavakkai Masala Recipe How to Make at Home in Tamil

இந்த ஸ்டைலில் பாவக்காய் வறுவல் செய்யும் போது, அதில் கசப்பு எதுவும் தெரியாது மற்றும் மிகவும் சுவையாகவும் இருக்கும். இப்படி பாவக்காய் வறுவலை செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும், இல்லையெனில் இதையே சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். முக்கியமாக குழந்தைகள் கூட இதை கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

கசப்புச் சுவை நிறைந்த பாவக்காய் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. முக்கியமாக இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு நல்லது, அனைத்திற்கும் மேலாக இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இந்த பாவக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள கசப்புத்தன்மையால் புழுக்கள் அழிந்து வெளியேறும்.

உங்களுக்கு கசப்பே இல்லாத பாவக்காய் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கசப்பு இல்லாத பாவக்காய் மசாலாவில ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- பாவக்காய் - 1
- பெரிய வெங்காயம் - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
- வெல்லம் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - 1/2 கப்

தாளிக்க:

- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

- பாவக்காயை நன்றாகக் கழுவி, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து புளித்தண்ணீர் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை சேர்த்து தாளிக்கவும்.

- கடுகு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து கிளறவும்.

- இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் மெல்லியதாக நறுக்கிய பாகற்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- ஒரு நிமிடம் நன்றாக வதக்கி மிளகாய்த்தூள், தனியாதூள் மற்றும் கரம் மசாலா தூளைச் சேர்த்து கிளறவும்.

- நன்றாகக் கலக்கவும். இறுதியாக, புளிக்கரைசல், உப்பு மற்றும் வெல்லம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- மிதமான தீயில், ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவிடவும்.

- விசில் வந்ததும் அடுப்பை அணைத்து பிரஷர் வெளியேறும் வரை காத்திருக்கவும்.

- பின்னர் மூடியைத் திறந்து தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும்.

- நன்றாக வற்றியதும் அடுப்பை அணைத்தால் கசப்பே இல்லாத சுவையான பாவக்காய் மசாலா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Wednesday, May 27, 2026, 15:36 [IST]
Desktop Bottom Promotion