அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் கீரை தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க

Posted By:

Andhra Keerai Thokku Recipe in Tamil: ஆரோக்கியமான உணவுகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது கீரை வகைகள்தான். ஆனால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு பிடிக்காத உணவென்றால் அதுவும் கீரைதான், அதற்கு காரணம் கீரையின் சுவைதான். கீரையை சுவையாக சமைக்க முடியாது என்று நமக்குள் நாமே ஒரு தவறான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு விட்டோம். ஆனால் உண்மையில் கீரையை வைத்து பல சுவையான உணவுகளை சமைக்கலாம். அதில் ஒன்றுதான் இந்த பாலக்குரா உள்ளி காரம் என்று அழைக்கப்படும் ஆந்திரா ஸ்டைல் கீரை தொக்கு.

இந்த ஆந்திரா ஸ்டைல் கீரை தொக்கு செய்வதற்கு மிகவும் எளிதாக இருப்பதுடன் சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவதற்கு அட்டகாசமாக இருக்கும். பெரும்பாலான ஆந்திரா ஹோட்டல்களில் இந்த கீரை தொக்கு பிரதானமான உணவாக இருக்கும். கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடலின் இதயம் முதல் எலும்புகள் வரை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Andhra Keerai Thokku Recipe How to Make Andhra Keerai Thokku

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கீரை தொக்கை எப்படி தொக்கு செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கீரை தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கட்டு பாலக் கீரை(மற்ற கீரைகளிலும் செய்யலாம்)

அரைக்க:

- 2 பெரிய வெங்காயம்
- 10 பூண்டு பல்
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு

தாளிக்க:

- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- ¼ ஸ்பூன் சீரகம்
- 1 வர மிளகாய்
- கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

- பாலக் கீரையை நன்கு கழுவி, தோராயமாக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும்.

- ஒரு மிக்சி ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

- கடுகு, சீரகம் பொரிந்ததும் வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.

- பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து, கெட்டியாகும் வரை சில நிமிடங்களுக்கு நன்றாகக் கிளறவும்.

- பின்னர் நறுக்கிய பாலக் கீரையைச் சேர்த்து, அது நன்கு சுருங்கும் வரை வதக்கவும்.

- சிறிது நீர் சேர்த்து, கீரையின் பச்சை வாசனை நீங்கி அது நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.

- தொக்கு நன்கு கெட்டியானதும் உப்பு சரிபார்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

- அவ்வளவுதான் சுவையான ஆந்திரா கீரை தொக்கு ரெடி. இதை சாதத்தில் போட்டு சிறிதளவு நெய் ஊற்றி சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Monday, April 6, 2026, 12:38 [IST]
Desktop Bottom Promotion