இட்லிக்கு ஒருவாட்டி இப்படி ஆட்டு குடல் குழம்பு செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க...

Posted By:

Aatu Kudal Kuzhambu Recipe In Tamil: சன்டே வந்துவிட்டாலே, வீடே மணக்கும் அளவில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டால் தான், அந்த நாள் முழுமையடையும். இந்த வாரம் ஸ்பெஷலாக என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் மட்டன் பிரியரா? அப்படியானால் ஆட்டு குடல் குழம்பு செய்யுங்கள். அதுவும் காலையில் இட்லிக்கு செய்து சாப்பிட்டால், இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ஆட்டு குடல் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆட்டு குடல் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Aatu Kudal Kuzhambu How To Make a Mutton Kudal Kuzhambu Recipe

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு....

* ஆட்டுக்குடல்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 டம்ளர்

வறுத்து அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
* பூண்டு - 7-8 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஆட்டுக்குடலை நீரில் 2 முறை அலசிக் கொள்ள வேண்டும்.
* பின் கொதிக்கும் நீரில் ஆட்டுக்குடலைப் போட்டு 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். குடல் நன்கு உப்பி வந்ததும், குடலை வெளியே எடுத்துவிட்டு, அதில் உள்ள மேல் தோலை கத்தியால் சுரண்டி நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் துண்டுகளாக்கப்பட்ட குடலை போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1/2 டம்ளர் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சீரகம், மிளகு சேர்த்து வறுத்து, பின் தீயைக் குறைத்து மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள குடலை சேர்த்து, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து, குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, நன்கு 5-8 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ஆட்டு குடல் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, December 22, 2024, 7:00 [IST]
Desktop Bottom Promotion