கர்ப்பமா இருக்கீங்களா? பீட்ரூட் சாப்பிடுங்க!

By Mayura Akilan

 Beetroot
கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீர்ரூட் தற்போது அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாகிவிட்டது. இதற்கு காரணம் அதில் உள்ள எண்ணற்ற சத்துக்களே. பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம் மற்றும் மக்னீசியம் போன்றவை காணப்படுகின்றன. இனிப்பான இந்த காய்கறியில் குறைந்த கலோரிகளே உள்ளன.

இதயத்திற்கு ஏற்றது

இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதன்மூலம் உயர்ரத்த அழுத்தம், பக்கவாதம், இதயநோய் போன்ற நோய்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் ஆஸ்துமா நோய் ஏற்படுவதில் இருந்து தடுக்கப்படுகிறது.

ஆரோக்கியமான குழந்தை

பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.

உற்சாகத்தை அதிகரிக்கும்

இது மனதிற்கு உற்சாகம் தரும் காய்கறி. சற்றே சோம்பலாகவோ, மன அழுத்தம் ஏற்படுவதுபோல உணர்ந்தாலோ பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம். இது மனதை உற்சாகப்படுத்தும், மகிழ்ச்சி ஏற்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு கண்நோய் ஏற்படாமல் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே கர்ப்பிணிகளுக்கு சாலட், ஜூஸ், சூப் போன்றவைகளை செய்தும் கொடுக்கலாம்.

Story first published: Thursday, May 10, 2012, 16:24 [IST]
Desktop Bottom Promotion