பாப்பா பார்த்து சிரிச்சா முடி கொட்டுமா?

By Mayura Akilan

Home Remedies for Hair Loss after Pregnancy
கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உட்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு உடலின் ஊட்டச்சத்துகள் அதிகரிக்கும். இதனால் உடலும் முகமும் பொலிவுறும், கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். பிரசவத்திற்குப் பின்னர் உடலில் சத்துக்கள் குறைய ஆரம்பிக்கும். இதனால் கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக உதிர ஆரம்பிக்கும். உடனே வீட்டில் உள்ள பெரியவர்கள் அம்மாவின் முகத்தைப் பார்த்து குழந்தை சிரித்தால் முடி உதிரும் என்று கூறுவார்கள். இது கிராமப்புறங்களில் ஏற்படும் நம்பிக்கைதானே ஒழிய உண்மையில்லை. பிரசவத்திற்குப் பிறகு கூந்தல் உதிர்வதற்கான காரணங்களையும், அதற்கான எளிய மருத்துவக்குறிப்புகளையும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

கர்ப்ப காலத்தில் பெண்களின் ஹார்மோன் சுரப்பில் மாறுபாடுகள் இருக்கும். இதனால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். பிரசவத்திற்குப் பிறகு ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும் எனவே கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக உதிர ஆரம்பிக்கிறது. அதனால்தான் மருத்துவர்கள் பிரசவத்திற்குப் பின்னரும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். பழங்கள், காய்கறிகளில் ப்ளேவனாய்டுகள், ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன அவை கூந்தல் உதிர்வதை தடுக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். கீரைகள், புளு பெர்ரீ, கிவி பழம், போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் பிரசவத்தின் போது உடல் இழந்த சத்துக்கு ஏற்ப பேலன்ஸ் ஆகும்.

பிரசவத்திற்குப் பின்னர் பெண்கள் தங்களின் உடல் மீது அக்கறை செலுத்துவதில்லை. இதன் காரணமாகவே அவர்களுக்கு நாளடைவில் உடலில் கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே தாய்மார்கள் தங்களின் உடலில் வைட்டமின் பி காம்ளக்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் இ, பயோடின், துத்தநாகம் போன்றவை குறையாமல் பாதுகாக்க சரிவிகித ஊட்டச்சத்துணவை உட்கொள்ள வேண்டும்.

மேலும் வீட்டில் உள்ள பொருட்களை உபயோகப்படுத்தி முடி உதிர்தலை தடுக்கலாம் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு மைய அரைக்கவும். அதை தலையில் பூசி ஊறவைக்கவும். பின்னர் மைல்ட் ஷாம்பு, கன்டிசனர் போட்டு அலசவும். தலை பட்டுப்போல இருக்கும்.

விளக்கெண்ணெயை சூடாக்கி அதில் பாதாம் எண்ணெயை ஊற்றி கலக்கவும். இந்த கலவையை தலையில் அப்ளை செய்து குளிக்கவும். வாரம் ஒருமுறை இவ்வ்வாறு செய்து வர முடி உதிர்தல் கட்டுப்படும். அதேபோல் தேங்காய் பாலும், கற்றாழையும் கூந்தலுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றது. இவற்றை ஒன்றாக சேர்த்து கூந்தலின் வேர்களில் படுமாறு மசாஜ் செய்யவும். பின்னர் அரை மணிநேரம் ஊறியபின்னர் மசாஜ் செய்யவும்.

Story first published: Saturday, June 16, 2012, 16:50 [IST]
Desktop Bottom Promotion