சுறுசுறுப்பா விளையாட விடுங்க; குழந்தைகளின் மன அழுத்தம் சரியாகும்

By Mayura Akilan

Children
சுறுசுறுப்பாக இருப்பது, விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் பதின் பருவ குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்க முடியும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பதின் பருவ குழந்தைகளை பாதிக்கும் முக்கிய நோய்களில் ஒன்றாக மன அழுத்தம் உள்ளது. மன அழுத்தத்தினால் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பதோடு அனைத்து செயல்பாடுகளிலும் மாணவர்களின் ஈடுபாடு குறைகிறது. இந்த குழந்தைகள் விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்வது, அல்லது ஏதாவது ஒரு காரியத்தில் சுறுசுறுப்பாக இருப்பது ஆகியவற்றின் மூலம் விடலை பருவத்தில் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

7 வது படிக்கும் குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்த குழந்தைகளும், உடல் ரீதியான செயல்பாட்டை அதிகரித்துக் கொண்ட குழந்தைகளும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து விடலைப் பருவ மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் சுறு சுறுப்பாக இருந்த மாணவர்களிடம் மன அழுத்த பாதிப்பு கணிசமாக குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விடலைப் பருவ பையன்களுடன் ஒப்பிடும் போது பருவ வயது பெண்கள் தான் அதிக அளவுக்கு மன அழுத்த பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் கல்வித்திறன் பாதிப்பு, சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்படுவது, போதை வஸ்துக்களுக்கு அடிமையாதல் தற்கொலை போன்ற பயங்கர பாதிப்புகள் உண்டாகலாம். எனவே பெண்குழந்தைகளை அதிக சுறுசுறுப்பாக வைத்திருக்கவேண்டியது அவசியம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி

மற்றொரு ஆய்வில் தேர்வு எழுதும் நேரத்தில் மாணவர்களிடம் அவர்களின் எச்சில் கொண்டு ஆய்வு நடத்திய போது அவர்களுடைய நோய் எதிர்ப்புத்திறன் மற்ற நேரங்களை விட குறைந்திருந்தது. இதற்கு மன அழுத்தம் தான் காரணம் என்று கண்டறியப்பட்டது. எனவே எனவே குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.

சத்துள்ள ஆரோக்கியமான உணவை கொடுப்பதன்மூலம் குழந்தைகள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அது தன்னம்பிக்கையை கொடுப்பதோடு மன அழுத்தம் போக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, January 20, 2012, 17:23 [IST]
Desktop Bottom Promotion