குழந்தைகளை அதிக மதிப்பெண் பெற வைக்கும் தண்ணீர்!

By Mayura Akilan

Drinking Water
குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காக பணம் செலவு செய்து டியூசன் அனுப்பும் பெற்றோரா? இனி கவலை வேண்டாம். தேர்வுக்கு கிளம்பும் முன் அவர்களை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வைத்து அனுப்புங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண்களை வாங்குவார்கள் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

தேர்வு நேரம் வந்து விட்டாலே சிலருக்கு படபடப்பு அதிகமாகிவிடும். ஒரு சில மாணவர்களுக்கு காய்ச்சல் வந்துவிடும். மாணவர்களுக்கு மேலாக பெற்றோர்கள் பதற்றத்தில் எதையாவது செய்து வைத்து விடுவார்கள். குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க சத்து டானிக், அது, இது என்று பணத்தை தண்ணீராக செலவழிப்பார்கள். ஆனால் மாணவர்களின் மார்க் பற்றிய கவலை வேண்டாம் தேர்வு எழுதுவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவைத்து அனுப்புங்கள் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால், மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் மார்க் கார்ட்னர் தலைமையிலான குழுவினர் பல்கலைக்கழக மாணவர்களிடம் ஒரு ஆய்வு நடத்தினர். தேர்வுக்கு செல்லும்போது, தண்ணீர் அல்லது குளிர்பானம் எடுத்து செல்வீர்களா, தேர்வு எழுதுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பீர்களா என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. தேர்வு எழுதுவதற்கு முன்பு தண்ணீர் குடித்த மாணவர்களின் மதிப்பெண்களையும், தண்ணீர் குடிக்காத மாணவர்களின் மதிப்பெண்களையும் ஒப்பிட்டு பார்த்தனர். இதில், தண்ணீர் குடிக்காமல் எழுதியவர்களைவிட தண்ணீர் அல்லது குளிர்பானம் குடித்தவர்கள் சற்று கூடுதல் மதிப்பெண் பெற்றிருந்தது தெரிய வந்தது.

உடலில் தண்ணீர் அளவு சீராக இருக்கும்போது, மூளை செல்களுக்கு இடையில் தகவல்கள் வேகமாக பரவுவது தெரிய வந்துள்ளது. மேலும் தாகம் ஏற்படும்போது, நரம்புகள் தளர்வு அடையும். எனவே, தேர்வு எழுதும்போது தாகம் ஏற்பட்டால் அதனால் பாதிப்பு ஏற்படும். எனவே, தேர்வுக்கு செல்லும்போது தண்ணீர் எடுத்துச் செல்வது நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் லண்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தேர்விற்கு முன்னதாக தண்ணீர் குடித்து விட்டு எழுதிய மாணவர்கள் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். 7 வயது முதல் 9 வயது வரை உடைய மாணவர்கள் தங்களின் தேர்வினை சிறந்த முறையில் எழுதினர். அவர்களுக்கு நினைவுத்திறன் அபாரமாக செயல்பட்டது கண்டறியப்பட்டது.

எனவே பெற்றோர்களே உங்களின் பிள்ளைகள் தேர்வுக்கு தயாராகும் போது பதற்றமாக இருக்கிறார்களா? அவர்களை ரிலாக்ஸ் ஆக அமரவைத்து ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வைத்து அனுப்புங்கள். அப்புறம் பாருங்கள் அசத்தலாய் மார்க் வாங்கிக்கொண்டு வருவார்கள்.

Story first published: Wednesday, August 8, 2012, 15:24 [IST]
Desktop Bottom Promotion