10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப் போறீங்களா? நல்லா எழுத இத மறக்காம ஃபாலோ பண்ணுங்க..

10th Exam Preparation Tips: இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வானது மார்ச் 26 ல் தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இருப்பினும் பொதுத்தேர்வு என்பது அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் கால கட்டம் என்பதால் மிகுந்த மன அழுத்தம் என்பது மாணவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.

அதிகமான மதிப்பெண்ணை எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம், பொதுத்தேர்வு பயம் இவை அவர்களின் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே மாணவர்கள் பொதுத்தேர்வு அச்சம் நீங்கி எப்படி ஒரு தெளிவான மனநிலையில் பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும், மேலும் அவர்களின் மன அழுத்தம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

10th Exam Preparation Tips Top 8 Stress Management Techniques For Board Exam Students In Tamil

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழிகள்

இந்தியாவில் பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக உள்ளது. சில மாணவர்களுக்கு பொதுத்தேர்வு சமயங்களில் காய்ச்சல் கூட வந்து விடுவது உண்டு.

இதற்கு முக்கிய காரணம் பொதுத்தேர்வு குறித்த அச்சம், தேர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரியாமல் இருப்பது, தேர்வு நேரத்தில் ஏற்படும் பதட்டம், அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற கட்டாயம், தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும் என்பது பற்றி தெரியாமல் இருப்பது போன்ற பல பிரச்சனைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே பொதுத்தேர்வு சமயத்தில் மாணவர்கள் எப்படி தயாராக வேண்டும், எப்படி திட்டமிட்டு படிக்க வேண்டும், எப்படி அவர்களின் மன அழுத்தத்தை கையாள வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக இங்கே காண்போம்.

1. திட்டமிட்டு படியுங்கள்

எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செய்யும் போது தான் அது வெற்றி அடையும். அதே மாதிரி தான் படிப்பிலும் திட்டமிட்டு செயல்படுவது மிகவும் அவசியம். எனவே நீங்கள் தினசரி படிப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு கால அட்டவணையை தயார் செய்யுங்கள். ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை கொடுக்க வேண்டும். உங்கள் தேர்வு அட்டவணை அடிப்படையில் பாடங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்ற வகையில் நேரத்தையும் நாட்களையும் பிரித்து அட்டவணையை போட்டு அதன்படி செயல்படுங்கள்.

2. தியானம் செய்யுங்கள்

ஒரு இலக்கை நோக்கி போகும் போது கவனச் சிதறல் என்பது அவசியம் ஏற்படும். எனவே உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு தியானம், சுவாச பயிற்சிகள் போன்றவற்றை சில நிமிடங்கள் நீங்கள் செய்ய வேண்டும். இது உங்கள் மன அழுத்தத்தை குறைத்து ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. இது உங்களுக்கு ஒரு தெளிவான மனநிலையை கொடுத்து இலக்கை நோக்கி அடைய வழி காட்டும்.

3. தினசரி உடற்பயிற்சி

முதலில் உங்கள் உடல் சுறுசுறுப்பாக இருந்தால் தான் மனசு சுறுசுறுப்பாக இருக்கும். எனவே பொதுத்தேர்வு சமயங்களில் தினமு‌ம் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய மறந்து விடாதீர்கள். இதனால் இரத்த ஓட்டம் அதிகமாகி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். யோகா, நடைபயிற்சி, நடனம், கொஞ்சம் விளையாட்டு இவற்றை முயற்சி செய்து வாருங்கள்.

4. ஆரோக்கியமான உணவுகள்

பொதுத்தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு சாப்பிடுவதற்குக் கூட நேரம் இருக்காது. சில மாணவர்கள் சாப்பிடாமல் பரீட்சைக்கு ஓடுவார்கள். ஆனால் உங்கள் உடலுக்கு ஆற்றல் என்பது மிகவும் அவசியமானது. தினமும் படிப்பதற்கு போதுமான எனர்ஜி தேவை. எனவே பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அதிகப்படியான காஃபின், நொறுக்கு தீனிகள் வேண்டாம். இது உங்களுக்கு தூக்கத்தை வரவழைக்குமே தவிர படிப்பதற்கான ஆர்வத்தை ஒரு போதும் கொடுக்காது.

5. தூக்கம் அவசியம்

பொதுத்தேர்வு என்றாலே பல மாணவர்கள் தூங்காமல் நிறைய நேரம் கண்விழித்து படிப்பதுண்டு. பிறகு தேர்வு அறையில் தூங்குவதும் உண்டு. எனவே அப்படியில்லாமல் 7-8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். பொதுத்தேர்வு சமயங்களில் போதுமான தூக்கம் என்பது மிகவும் அவசியம். உங்கள் மூளைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் அது புத்துணர்ச்சி பெறும். எனவே சரியாக தூங்கி தேர்வை சிறப்பாக எழுதுங்கள்.

6. தண்ணீர் குடியுங்கள்

பொதுத்தேர்வு சமயங்களில் நிறைய மாணவர்கள் போதுமான தண்ணீர் குடிப்பதில்லை. எங்கே தண்ணீர் குடித்தால் அடிக்கடி பாத்ரூம் செல்ல நேரிடுமோ என்ற செய்வதில்லை. ஆனால் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால் நீரிழப்பு, சோர்வு மற்றும் மன அழுத்தம் அதிகமாக வாய்ப்பு உள்ளது. உங்கள் உடலில் எலக்ட்ரோலைட்டுகள் குறைந்து சோர்வு ஏற்படும். எனவே தண்ணீர் நிறைய குடியுங்கள்.

7. மொபைல் போன் அதிகம் வேண்டாம்

தேர்வு நேரங்களில் நீங்கள் ரிலாக்ஸிற்காக மொபைல் போன் பார்த்தாலும் அதிக நேரம் பார்க்காதீர்கள். இதனால் படித்ததை மறந்து மொபைல் போன் காட்சிகள் மூளையில் பதிவாகி விடும். மொபைல் போன் உங்கள் கவனச் சிதறல்களை அதிகரிக்கிறது. எனவே முடிந்த வரை தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் போன் பயன்பாடு வேண்டாம்.

8. பாசிட்டிவ் எண்ணங்கள் மற்றும் நிதானம் அவசியம்

தேர்வு நேரங்களில் பதட்டம் அறவே கூடாது. பதறாத காரியம் தான் என்றைக்கும் சிதறாது. எனவே சிறிது நேரம் ஓய்வு, இசை கேட்பது, ஓவியம் வரைவதில் ஈடுபடுங்கள். என்னைக்கு என்ன தேர்வு என்பதை அட்டவணை போட்டு வீட்டில் கண்முன்னே ஒட்டிக் கொள்ளுங்கள். இது தேர்வு நாளை மறக்காமல் இருக்க உதவி செய்யும். பாசிட்டிவ் வாசகங்களை வீட்டின் சுவரில் ஒட்டலாம். உங்கள் வெற்றியை கண் முன்னே கொண்டு வந்து நினைத்து பார்க்கலாம். பாசிட்டிவ் எண்ணங்கள் எப்பொழுதுமே உங்கள் மனதிற்கு ஒரு பூஸ்டாக அமையும்.

உங்களின் கடின உழைப்பு என்றைக்கும் வீண் போகாது, வெற்றி நிச்சயம்.

Story first published: Saturday, March 16, 2024, 16:15 [IST]
Desktop Bottom Promotion