பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3, 000 வழங்க தமிழக அரசு முடிவு?

By Devika Manivannan

தமிழ்நாட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. மக்கள் உற்சாகமாக பொங்கலை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகிறது.

அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு நடைமுறை திமுக ஆட்சியிலும் தொடர்கிறது. ஜனவரி மாத தொடக்கத்திலேயே மக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் மக்கள் தங்களின் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். முதல் பொங்கல் பரிசு என்றால் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்டவை தான் வழங்கப்பட்டன.


Pongal Tamilnadu Ration

பின்னர் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்குவதும் அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய் ரொக்கத்தை பொங்கல் பரிசாக வழங்கினார். பொங்கல் பரிசு தொகுப்பில் இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச தொகை இது ஆகும். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

2021ஆம் ஆண்டில் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு தொடக்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கியது. ஆனால் மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறி ரொக்கப்பணம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இது மக்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.


2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு பச்சரிசி, கரும்பு, சர்க்கரை மட்டுமே வழங்கியது. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொது மக்களுக்கு மிகப்பெரிய ஒரு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

குறிப்பாக மக்களுக்கு ரொக்கமாக பணம் வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது . பொங்கல் பரிசு தொகையுடன் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை அரசு திட்டமிட்டு இருக்கிறதாம். இந்த முறை 3,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்குவதற்கு அரசு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் எப்படி மேல்முறையீடு செய்வது?

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களுடன் இந்த 3 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் அந்த செலவை ஈடு கட்டுவது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி அரசு கூறி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகை வருகிறது என்பதால் பொங்கல் பரிசு தொகுப்புக்கு அரசு முக்கியத்துவம் தருவதாக தெரிகிறது.

தங்க நகை வாங்கி பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க!! ஷாக் கொடுக்கும் கோடக் அறிக்கை!!

அது தவிர பொங்கல் பரிசு தொகையில் இடம் பெறும் பொருட்கள் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த ஆண்டு அவை தரமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . விரைவில் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. முன்னதாக 5 ஆயிரம் ரூபாய் பணத்துடன் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என சில அமைச்சர்கள் கூறியதாகவும் நிதி பற்றாக்குறை இருப்பதால் அதனை 3 ஆயிரம் ரூபாய் என குறைக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Credit: Goodreturns

Story first published: Wednesday, December 10, 2025, 8:51 [IST]
Desktop Bottom Promotion